Saturday, August 29, 2015

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி.


”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.


”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்”


இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம்.

”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் இருக்கமே!!!!"  பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்ந்தே கொண்டுவரும் சம்பவங்கள்,...


நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி".
இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே
சமர்ப்பித்திருக்கிறார்.

ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால
தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import"

சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்).

நாகர்கோவில்-> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள்.


திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தமுழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.

”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால்,
என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?”

“தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா...

“சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை....

படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்ப்படுத்தும் சம்பவங்கள்.

மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது.
மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் சரவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது...

”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது
தெரியாமலிருக்க வாய்ப்பில்லை..,

”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும்.

தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்....

ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்ப்பட்ட குழப்பம்,

இன்னும் பல பல விஷயங்கள்.....

”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம்.

“கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு
முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார்.

(சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும்.

சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான
தேசிய விருதை  தனதாக்க்கிக்கொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,....

“தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில
கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்.

பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!"

வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்????

*************************************
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

பாரதிமணி

வம்ஸி புக்ஸ்

ISBN # 978-93-84598-06-8

விலை : ரூ. 550.
*************************************


www.vazhippokkann.blogspot.com









Monday, August 17, 2015

செம்பருத்தி...


அண்ணன் தம்பி மூவர், அவர்தம் வாழ்க்கைத்துணைகள், கொண்டதும் பெற்றதும். இவர்களை சுற்றி சுமார் 35 வருடங்களுக்கு நடக்கும் சம்பவங்கள். இவைகளே நாவலின் அடிநாதம்.

காலயெந்திரத்திலேறி சென்று கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடச்செய்யும் தி.ஜா வின் வசீகர எழுத்து மற்றும் சொல்லாடல்கள்...

கதை,கதாபாத்திரங்கள்,கால சூழ்நிலைகள் (முதற்பதிப்பு 1968) இம்மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்து அதை நேர்கோடாக நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை கொண்டுசெல்வதென்பதை நினைத்து பார்த்தாலே மூச்சு முட்டிக்கொண்டுவருகிறது (தி.ஜாவின் பாணியிலே).


’உடனே புறப்பட்டு வரவும்,அவசரம்.’ தந்தி அடிக்கிறவர்கள் செய்தியை ஒரு கோடி காட்டினால் தான் என்ன? மனிதர்களை கலக்குவதற்காகவே இப்படி ஒரு கருவி,அதற்கு ஒரு இலாகா, அதற்க்கு இத்தனை ஆட்கள்!”

மனிதர்களை 24/7 அந்நிலமையிலேயே வைத்திருக்கும் தற்ப்போதைய தொழில்நுட்ப விஷயங்களை தி,ஜா எவ்வாறு கையாண்டிருப்பார்??

ரத்தத்தை கொதிக்க வைக்கும் மனிதர்கள்,சொற்கள்,நிகழ்ச்சிகள் என்று பலவற்றை பற்றி புவனாவிடம் சட்டநாதன் சொல்லிக் குமுறியதுண்டு. அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அவனோடு சற்றுக் குமுறுவது போலவும் அழுவது போலவும் செய்துவிட்டுக் கடைசியில் அன்று சொன்ன மாதிரி ஒரு அற்ப விஷயத்தைச் சொல்லிச் சிரிப்பில் கொண்டு முடித்துவிடுவாள்”.


1968 - 2015 எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய விஷயமல்லாவாவிது!!!


இடக்கரடக்கல்” - நாவலின் ஒரு இடத்தில் கோடிட்டுக்காட்டப்படும் சொல். கமலஹாசனும் தி.ஜாவைப் படிப்பார் போல...


அசிகை” - முதல் முதலாய் கேள்விப்படும் ஒரு சொல்லாடல்.


பெரிய உடம்பு. மாநிறம். உடம்புக்கேற்ற பெரிய தலை. மொட்டைத்தலை. உடம்பெல்லாம் விபூதிப்பட்டை. கழுத்தில் ஒரு ருத்திராட்சை மாலை. இடையில் செங்கல் பார்டரில் ஒரு ஜரிகை வெண்பட்டால் கச்சம். ஒரு கட்டம் போட்ட சிவப்பு பட்டை இடையில் சுற்றியிருந்தது.வெறும் உடம்பு, ரோமம், மச்சம் ஏதுமின்றித் திருநீறும் சந்தனமுமாகச் சுருக்கமின்றிப் பளபளத்தது. நடு வயதைக் கடந்ததாலோ என்னவோ தசை மட்டும் சற்று எலும்பை விட்டுக் கட்டு கழன்றிருந்தது. லேசாகத் தொந்தி. காலிலும் கையிலும் நீள நீளமாக விரல்கள். பெரிய நகங்கள்”.


உருவத்தை உருவகப்படுத்தும் வார்த்தை ஜாலம்.


நாவலை எவ்வாறு படிக்கவேண்டுமென்று பா.ரா ஒரு விளக்கமே கொடுத்திருக்கிறார்....

http://www.writerpara.com/paper/?p=10497
"நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை".



(வைக்கோல் போர் இருந்த இடம் இப்போது கார்ஷெட் ஆகிவிட்டபடியால் எனக்கு அழுக்கு போர்வை மட்டுமே, கூடவே எங்கள் வீட்டு செம்பருத்தி மரமும்).


---------------
செம்பருத்தி
தி.ஜானகிராமன்
காலச்சுவடு
விலை :400 ரூ
---------------

Sunday, February 15, 2015

இரயில் புன்னகை.



1982-84ல் வெளியான 8 கதைகளின் தொகுப்பு.

”கச்சேரிக்கிடையே என்னத்த வாயில போட்டுக்கிறாருன்னு போயி பாத்திட்டு வா” அரியக்குடியின் தோடியில் லயிக்காமல் அவரின் தொண்டையில் கவனம் குவித்த சுஜாதாவின் மாமா, தன்னுடைய தொல்காப்பிய மேற்கோள்களை புறந்தள்ளி மூச்சிரைப்பை முக்கியமாக்கிய எழுத்தாள நண்பர் என தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் ஆரம்பிக்கிறது அவதானிப்பு பற்றிய சுஜாதாவின் முன்னுரை,

முதல் கதை “இரயில் புன்னகை”. தமிழக இளைஞனொருவன் பம்பாயின் ஜனத்திரலில் மெற்க்கொள்ளும் ஒரு ரயில் பயணம், சற்றுமுன் பார்த்து புன்னகைத்த அந்த தமிழ் முகம் தண்டவாளத்தில் சடமாய் கிடக்க, அலைகழிக்கும் அன்றாடத்தை நொந்தபடி முன்னிட்டு அலுவலகம் செல்லும் சாமிநாதன் கதாபாத்திரம். மனம்பொறுக்காமல் இறந்தவனின் வீடு நோக்கி விரையும் சாமி, இறந்தவனின் வீடு எப்படியும் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும் சந்தோசத்தில் அடுத்த ஆள் தேட ஆரம்பிக்கும் அபார்ட்மெண்ட் மேனேஜர். “இறந்தவனுக்கும் உனக்கும் என்ன உறவு?” மேனேஜரின் கேள்விக்கு புன்னகையை பதிலாக தரும் சாமிநாதன்.

குதிரை கடித்ததால் கிருஷ்ணசாமி ”குதிரை கிச்சாமி” ஆகும் ”குதிரை” கதை.

150 பிராங்க் காட்டன் சட்டையைவிட சல்லிசாக 250ரூவாய்க்கு விழுப்புரத்தில் வாங்கிவந்த ”பாரீஸ் தமிழ்பெண்” பெண்குழந்தை.

ஊர்தோரும் தேதிவாரியாக விஜயம் செய்யும் டாக்டர் ராஜ், அவரை பேட்டி காண குறுக்குவழியில் செல்லும் நிருபர். லேகியத்தை வாழ்க்கைக்காக வரித்துக்கொண்டிருந்தாலும் M.A இங்கிலீஷ் படிச்சதையும், இயற்க்கை வைத்தியத்துக்கு தூதுளங்கொடி தேடியலைந்ததையும் ”முழு வைத்தியன்” கதையில் அசுரத்தையாய் விவரிக்கும் டாக்டர் ராஜ்.

”அரை வைத்தியன் ” கதையில் தொழில்தர்மம் பேசும் டாக்டர் சீனிவாசராவ்.

பாதியில் நிறுத்த மனசில்லாமல் பல ஸ்டாப்பிங் தாண்டி இறங்க வைத்த புத்தகம்...


இரயில் புன்னகை.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்..
ரூ.45.

நகரம்.



1971-72 காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 14 கதைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் தலைப்பான “நகரம்” கதை நகரத்தின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒரு கிராமத்து பெண்ணுக்கு எப்படி அன்னியப்பட்டு இருக்குறது என்பதை அழகாய் உணர்த்துகிறது. 40 வருடம் கழித்தும் நம்மால் இயல்பாக கதைக்களத்தையும் அதன் சூழலையும் நிகழ்காலத்தில் பொறுத்திப்பார்க்க இயலும்.

வாத்தியார் வாத்தியார் தான்....


நகரம்.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்.
ரூ.75.

சஞ்சாரம்.



ஆவணப்படமாகவோ, ஆராய்ச்சிக்கட்டுரையாகவோ வந்திருக்க வேண்டிய கரு. தன்னுடைய களப்பணியினாலும், தேணுகா, பி.யெம் சுந்தரம் முதலிய இசை விமர்சகர்கள் வழி திரட்டிய தகவல்கள் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் கலைஞருக்கு இயல்பாய் கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் கரிசல்மண்ணின் கலைஞர்களுக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் கொஞ்சம் அதிகமான புனைவுகள் சேர்த்து நாவலாக்கியிருக்குறார் எஸ்.ரா.


பக்கிரி, ரத்தினம். கரிசல்மண்ணின் நாதஸ்வர கலைஞர்கள். கோவில் திருவிழாவிற்க்கு வாசிக்க செல்லும் இவர்கள், முதல்மரியாதை சம்பந்தமாக இரு ஊர்காரர்களுக்கிடையே ஏற்படும் தகறாரில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆத்திரப்படும் பக்கிரி கோவில் பந்தலை தீ வைக்க, பக்கிரியும் ரத்தினமும் ஊர் ஊராக தலைமறைவு வாழ்கிறார்கள்.

பக்கிரியின் நினைவலைகளில் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை நாவல் விரிகிறது. ஆங்காங்கே நிறைய கிளைக்கதைகள். ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதைகள் அசுவாரஸ்யமாக பக்கங்களை நிரப்புகின்றன.

கரிசல்மண்ணின் வாத்திய கலைஞர்களின் ஆதங்கங்களை பதிவுசெய்திருக்கும் வகையில் இந்நாவல் முக்கியத்தும் பெறுகிறது.


சஞ்சாரம்.
எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம்.
ரூ.370.

தண்ணீர்.


”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”.

”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை.

“தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார்.

1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது.

தண்ணிலாரியின் ஹாரன் சத்தம் கடவுளின் அசரீரியாய் கேக்கும் பரபரப்புகள் நிறைந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் ஜமுனா அவரது தங்கை சாயா. இவர்களிருவருக்கிடையில் நடக்கும் சம்பாஷணைகள்,வருத்தங்கள், சந்தோஷங்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிரும்பும் ஜமுனா. தன்போக்கிற்க்கு இழுத்துபிடிக்கும் சாயா.

முடிவற்று முடியும் நாவல்....

(சில வாரங்களுக்கு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தண்ணீர் நாவலைத்தழுவி திரைப்படம் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது)


தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
ரூ.115.

Saturday, January 31, 2015

வாடிவாசல் : சி.சு.செல்லப்பா


1950களில் எழுதப்பட்ட கதை.

தனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர்.

முதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள்.

அணைமரத்தோடு நெஞ்சணைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் மருதன். பிச்சியின் உறுதியை குலைக்கும் வகையில் கேலிசெய்து கொண்டு எதிர்புறம் நிற்க்கும் முருகன்.

“காளைய அணைச்சி ரெண்டுபவுன் சங்கிலியையும் உருமாபட்டயயும் உருவாம இவ வூரு போயி சேரமாட்டா போலருக்கே” என்று நினைத்தபடி பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் வாடிபுரத்து ஜமீன்.


61 பக்க குறுநாவலில் மாடுபிடி நிகழ்வையும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் விவரித்திருக்கும் விதம் அரை நூற்றாண்டு கடந்தும் வசீகரிக்கிறது.

”ஜல்லிக்கட்டு நடக்காததுனால நாங்கள்ளாம் ரொம்ப அப்செட்டா இருக்கம், கவர்மண்ட் இந்த பிரச்சினைய ஃபாஸ்ட்டா சால்வ் பண்ணணும்....” கேமரா லென்ஸை கூச்சத்துடன் பார்த்தபடி வருத்தத்தை வரவழைத்து பேசும் 20 வயது இளைஞன்.

எதோ ஒரு சேனலில் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக நடைபெறும் விவாதத்தை அசுவாரஸ்யமாய் கடந்து போவது மட்டுமே வரும்காலங்களில் நமக்கு கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்.....


{{ ரொம்ப வருஷமா எங்கூருக்கு பக்கத்துல காணும்பொங்கலன்னைக்கி நடந்துகிட்டு இருந்த மாட்டுவண்டி பந்தயத்தயும் இந்த வருஷத்திலருந்து நிப்பாட்டிப்புட்டாங்க............. }}

----------
வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 70

Sunday, January 25, 2015

மகாராஜாவின் ரயில் வண்டி : அ.முத்துலிங்கம்



மொழிப்பெயர்ப்பு கதைகளையும், பேட்டிகளையும் படித்திருந்தாலும், ரயில் வண்டியின் மேல் நீண்டநாட்களாக ஒரு கண் இருந்தது. காலச்சுவடில் முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் இருந்தாலும் ஆசையோடு எடுத்தது மகாராஜாவின் ரயில் வண்டியை. எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் பெருமூச்சையே பதிலாக கொடுக்கலாம்.

புத்தக தலைப்பில் ஆரம்பித்து மொத்தம் இருபது சிறுகதைகள். ”லாஜிகல் எண்ட்” என்ற வார்த்தை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் போல, பாதியில் ஆரம்பித்து படக்கென்று முடியும் கதைகள். ஒரு மென்சோகம் அனைத்து கதைகளிலுமே இழையோடுகிறது. கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அகாலத்தில் கொடூர கனவுகாண்கிறார்கள், அவர்களின் கனவுலகமும் நிஜவுலகமும் இருவேறு எல்லைகளை கொண்டபடியே இருக்கிறது.

”டே லைட்” சேவிங் முடிவுற்றதனலால் ஏற்பட்ட நேரமாறுதலை கிரகித்துக்கொள்ள தவறியதால் வயதானவர் ஒருவர் கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. கடிகாரத்தின் முட்களை ஒரு மனித்தியாலங்கள் முன்னோக்கி நகர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விசயத்தை தன் மகனும், மருமகளும் தனக்கு சொல்ல மறந்ததையும், அக்கணத்தில் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்ட உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாகவும் கற்பனை செய்துகொள்ளும் கதாபாத்திரம் “கடன்” சிறுகதையில்.

தட்டுமுட்டுச்சாமான்களுடன் அன்புக்காக ஏங்கியபடி நிலவறையில் நித்திரையின்றி புரண்டுகொண்டிருக்கும் முதியவர். “திங்கள்" ,"செவ்வாய்" என எழுதப்பட்ட சாப்பாட்டு பொட்டலங்கள் புதன்கிழமையன்றும் பிரிஜ்ஜில் தங்கியிருப்பதை வைத்தே அப்பாவின் இறப்பை தெரிந்துகொள்ளும் மகன்.
தொகுப்பில் ஆகச்சிறந்த சிறுகதையாக எனக்கு பட்டது “கடன்”.

மதிப்பில் குறைவான 5 சென்ட் நாணயம் 10 சென்ட் நாணயத்தைவிட அளவில் பெரியதாக இருப்பதை பற்றி வெகுநேரம் சிந்திக்கிறார் ( ஆமா, என்ன மாதிரியான டிசைன் இது???).

"கொம்புளானா” : எந்த இடத்தில் “ல” போடவேண்டும் எங்கே “ள” போட வேண்டுமென்று விளக்குவதை வைத்து கதை தொடங்குகிறது. ”இங்கிலீஷ் விங்கிலீஷ்” ஸ்ரீதேவியை கொண்டிருக்கிறது “கொம்புளானா” கதையில் வரும் பத்மாவதி பாத்திரம்.

”மாரியோ ங்கோமா” என்ற அமெரிக்கர் ஸ்பெயின் தூதரகத்தின் வேலைக்கான நேர்காணலை ராகுகாலம் காரணமாக தவிர்த்துவிடுகிறார், ஏன் என்பதற்கான பதில் “ராகுகாலம்” கதையில். ”எப்படி நம்மவீட்டு ஆளுங்க என்னென்னக்கி எப்போ ராகுகாலம்னு கரெக்டா ஞாபகம் வச்சிருக்காங்க” அப்படிங்கிற அங்கலாய்ப்பை கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஷார்ட் கட் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.

நாளை வழங்கப்பட இருக்கும் சூப்பில் கட்டாயம் இறைச்சி இருக்கும் என்று அனுதினமும் நினைத்தபடி அகதிகள் முகாமில் தூங்கச்செல்லும் இரு சிறுவர்களைப்பற்றிய கதை “நாளை”.

மீதமுள்ள கதைகள் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.

"மகாராஜாவின் ரயில் வண்டி" : வேறு எக்ஸ்பிரஸ்கள் கிடைக்காதபோது ஏறிக்கொள்ளலாம்.

----------------------

மகாராஜாவின் ரயில் வண்டி
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 125

Friday, January 23, 2015

அப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்



புரோகிதத்தில் ஆரம்பித்த ஒரு தலைமுறை, ஓட்டல் நடத்தி, வணிகம் செய்து ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவிற்க்கு பயணிக்கிறார்கள். ஐந்தாம் தலைமுறை வாரிசு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணும் உடன் பயணிக்கிறார். நான்காம் தலைமுறை பாட்டி ஒருவர் "எங்க பரம்பரை எப்பேர்பட்டது தெரியுமாக்கும்" என்று வீட்டுக்கு மாட்டுப்பொண்ணாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை.

புத்தகம் முழுவதும் விவரணை,விவரணை,விவரணை. கதையில் சொல்லப்படும் பல இடங்கள் நேரில் பரிச்சயமான இடங்களாதலால் படிக்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு.

இப்புதகத்தை படிக்கையில் மாயவரம் ஜங்ஷனில் உக்கார்ந்து கொண்டு இன்னொருமுறை படிக்கவேண்டும் என்று தோன்றவைத்தது பா.ரா.வின் சமீபத்திய கட்டுரை ஒன்று (எந்தெந்த புத்தகத்தை எந்தெந்த சூழ்நிலையில் படிக்கவேண்டுமென்று எழுதியிருப்பார்).

சுதேசி காலத்திலிருந்து செல்பிக்கு முன்பான காலகட்டங்களை தொட்டுச்செல்கிறது கதை.

"எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்கக்கூடாது". கதையின் சாரம்சம் இதுதான். பாலகுமாரன் அவர்கள் இதனை கதையின்வழி நம்மனக்கண்ணில் காட்சிபடுத்துகிறார்.

எங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைக்கும் "அப்பம்,வடை,தயிர்சாதம்"ன்னு மாயவரம் ஜங்ஷனில் கூவி விற்ப்பதற்க்கு நீங்க தான் சொல்லித்தரணும்" ஆறாம் தலைமுறைக்காக வைக்கப்படும் கண்ணீர் வேண்டுகோளுடன் முடிவடைகிறது கதை (படிக்கும் நம் கண்களிலும் கண்ணீர்த்துளிகள் நிச்சயம்).

இதை எழுதும் சமயம் திரு.பாலகுமாரன் அவர்கள் சுவாசப்பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருக்குறார்,அவர் பூரண நலம்பெற நம்முடைய பிரார்த்தனைகள்.

------------

அப்பம் வடை தயிர்சாதம்
பாலகுமாரன்
விசா பப்ளிகேஷன்
ரூ 160.

நெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.




2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் "தல எப்படியாவது உசார் பண்ணுங்க" என்று சொல்லிவைத்து. க‌டைசியில் அவ‌ரும் கைவிரிக்க‌ அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, "ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்" என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது.

"கடல்லியே இல்லியாம்" என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க "அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, அதயுங்கொண்டுபோயி விஷ்ணுபுர இலக்கிய வட்டத்து சந்திப்புல காலிபண்ணிட்டு வண்டேன், ரெண்டாம் பதிப்பு போடறாங்க,சீக்கிர வந்திரும், வாங்கிக்கிங்க..." என்று தேடலுக்கு தற்காலிக முற்றுப்பபுள்ளி வைத்தார், இருவருடங்கள் கழித்து இப்போது கையில் கிடைத்திருக்கிறது. மூணரை வருஷமா பட்டியலில முதலிடத்தில் இருந்தது போனவாரம் தான் நீக்கம் செய்யப்பட்டது.... சரி, விசயத்துக்கு வருவோம்...

தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார். ஒப்பந்த பணியாளர்களாக விருத்தாசலம் பெரியார் போக்குவரத்து கழக பணிமனையில் வேலைக்குசேரும் இம்மூவரின் பார்வையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது நாவல். வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்து சேர்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவர்களிடையே உருவாகும் நேசம், அவரவர்தம் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் சம்பவங்கள் என நம்மை நாவலினுள் விரைவாக இட்டுச்செல்கிறது குணசேகரனின் எழுத்து.

சியெல்லாக பணிமனைக்குள் நடத்துனர்,ஓட்டுனர்,தொழில்நுட்ப பணியாளராக அடியெடுத்து வைக்கும் தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார் எப்படி ஆரம்பத்தில் தலைகால் புரியாமல் அல்லாடுகிறார்களோ அதேபோல் பணிமனையின் வேலை சார்ந்த பயன்பாட்டு சொற்கள் நமக்கும் புரியவில்லை.
பக்கங்கள் செல்லச்செல்ல "யாருப்பா இன்னக்கி நைட்டு ஷிப்டு டெக்னிகலு,23ல கட்டு ஒடஞ்சிருக்குன்னு லாக் சீட்டுல எழுதி வச்சிட்டு போயிருக்காரு டிரைவரு, காலைல 4.40க்கு செட் அவுட்டு, அதுகுள்ளார மாத்திவுட்டுடுங்க" படிக்கும் நாமே ஏயினுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம.

ஒப்பந்த தொழிலாளர்களாய் இருக்கும் அவர்கள் மூவரும் படும் அவஸ்தைகளை ( தமிழினி "பாடுகளை" என்று எழுதிவைத்திருக்கிறது, புத்தகத அறிமுதத்தில் ) நம் கண்கொண்டு பார்க்கும்படியான எழுத்து நடை.

குணசேகரன் தான் ஒரு தொழிநுட்ப பணியாளராய் பணிபுரிவதால் விவரணைகளை மிக நுட்பமாக கையாண்டிடுக்கிறார்.

லைசன்ஸை திரும்ப பெற்றுச்செல்ல பணிமனைக்கு வரும் தமிழரசனும்,ஏழைமுத்தும் எதிர்பாராவிதமாக டூட்டி கொடுக்கப்படுவதும், கோணங்குப்பத்திலுருந்து சென்னைக்கு ஸ்பெஷல் வண்டியாக திருப்பிவிடப்படும்போதும், காயலான்கடைக்கு (கண்மணியின் எழுத்தில் "டவுன் கன்வர்சனுக்கு"காக வந்த, புஷ் ஸ்டார்ட் பொசிஷனில் உள்ள) செல்ல வேண்டிய வண்டியை குலசாமியை வேண்டிக்கொண்டே ஏழை உருட்டிசெல்லும் போதும் நம்மனதும் சேர்ந்து பயணிக்கிறது.
சென்னை பயணவழியில் வரும் மிலிட்டரி மேன் மற்றும் அவரது மகள் பாத்திரங்கள் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை.

பஸ் விருத்தாசலம் டூ கோணாங்குப்பம் டூ சென்னை வந்திருச்சே, போறவழியில "வான்ட் ஆப் டீசல்" ல நின்னுட போகுதே என்னும் பதைபதைப்பு ஏழை, தமிழோடு சேர்த்து நமக்கும் வருகிறது.

கூட்டாளிகள் இருவருக்காக பணிமனையில் பதட்டத்தோடு காத்திருக்கும் அய்யனார், ரியர் ஜாய்ண்டோடு 0064 வண்டியை தேடி சென்னை ரோட்டில் சென்று சந்திப்பதாக கதைமுடிகிறது.

சியெல் வேலை இன்னும் சில நாட்களில் நின்றுவிடும்.வாழ்க்கை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு பழுதாகி நின்றுகொண்டிருக்கும் 0064 நோக்கி செல்கிறார்கள் மூவரும். நீண்டு கிடக்கும் கருப்பு ரிப்பனாய் "நெடுஞ்சாலை".


சமீகமாக படித்தவற்றில் "ஆகா முடிந்துவிட்டதே" என்று ஏங்க வைத்த நாவல். குணசேகரன் அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------

‍‍‍‍‍புத்தக விபரம்:
நெடுஞ்சாலை
தமிழினி பதிப்பகம்
ரூ. 290.

Wednesday, January 14, 2015

"காகிதப் படகில் சாகசப் பயணம்" - புத்தகத்தைப் பற்றி....


தன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார்.

ஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார்.

எழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் "மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்") கண்டிப்பாய் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக நக்கீரன் கோபால் விசயத்தில்.

பெட்டிக்கடைகளின் மெல்லிய இரும்பு கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் வார இதழ்களை இழுத்து த‌மதாக்கிக்கொள்ளும் வாசக மனநிலையிலிருந்து பார்க்கையில் வெள்ளை காகிதம், புத்தகமாய் மாறி வாசகர்கள் கையில் கிடைக்கும்வரை இடம்பெரும் உழைப்புகள்,துரத்தல்கள்,கவலைகள்,துரோகங்கள்,பரிணாமங்கள் தெரியவருகின்றன.

ஆரம்ப கட்டுரைகள் கொடுக்கும் உற்சாகம் கடைசி மூன்றில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

************************************************

புத்தகத்தில் பிடித்த‌ வ‌ரிக‌ள் :

"காத்திருக்க‌ காத்திருக்க‌தானே க‌ரித்துண்டு வைர‌மாகிற‌து." - கருணாகரன்.

"இந்த‌ உல‌க‌த்தில் நீ ம‌ட்டுந்தான் ந‌ல்ல‌வ‌ன்.உன்னை எல்லாரும் தூக்கிவ‌ச்சி கொஞ்ச‌னும்னு எதிர்பார்க்காதே, நாம‌ ந‌டந்துபோற பாதை முழுக்க‌ ரோஜா இத‌ழ்களாலேயே அமைஞ்சிருக்கும் என்று நினைக்காதே, அதில் முட்க‌ளும் இருக்கும்.முட்க‌ளை ந‌சுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் ச‌த்ரிய‌ன். முட்க‌ளை ஒதுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் சாண‌க்கிய‌ன். முள்ளுக்கு ப‌ய‌ந்து ந‌ட‌ப்ப‌தையே நிறுத்திவிட்டால் அவ‌ன் கோழை." ‍‍ - சுதாங்க‌ன்.

************************************************

ஒரு சாமானியனாக‌ ப‌த்திரிக்கையுல‌கில் நுழைந்து த‌கிடுதித்த‌ங்க‌ளையும், த‌ந்திர‌ங்க‌ளையும் ச‌மாளித்து ப‌ய‌ணப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் க‌ருணாக‌ர‌னுக்கு ந‌ம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

************************************************

புத்தக விபரம் :

காகிதப் படகில் சாகசப் பயணம்

பெ.கருணாகரன்

குன்றம் பதிப்பகம்

விலை : ரூ 150.