Sunday, May 8, 2011

கிறுக்கல்கள் - 08-05-2011.

இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை...
சென்னையில் பல இடங்களிலும், மயிலாடுதுறையில் இரு முறையும் சரிசெய்து கொண்டேன்.

கொஞ்சம் ஆச்சரியம் தான்... பொதுவாக ஒரு கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இது போல ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால் எந்தக்கடையில் வாங்கியதாக இருந்தாலும் கண்ணாடிக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை... ஏன்??? தெரிந்தால் சொல்லுங்களேன்....

குரோம்பேட்டை MIT மேம்பாலத்தை வழக்கம்போல் வாகனங்களை முந்திக்கொண்டு கடக்கையில் தென்பட்டது எதிரே கிராஸ் செய்த ஒரு டெம்போ டிராவலர் “நயிநார் டிராவல்ஸ்” என்ற முகப்போடு... அடடா.. என்ன ஒரு தமிழ் ”படுத்து”தல்.சொன்னவருக்கு தெரியவில்லையேனில் எழுதியவருக்காவது தெரிய வேண்டாமா???

(மாயவரத்தில் “பாப்புலர் டிஜிட்டல் பிரஸ்” என்று ஒரு அச்சகம் இருக்கிறது. இங்கு அச்சடிக்கப்படும் அனைத்து வாசகங்களும் அச்சக ஓனர் படித்துப்பார்த்த பிறகே அச்சுக்கு அனுமதி அளிக்கப்படும். கொடுக்கின்ற காசில் முன்னபின்ன இருந்தாலும் அட்ஜட் செய்துகொள்ளும் அவர் , பிரசுரிக்கப்படும் வாசகங்களிலோ/எழுத்திலோ அச்சக பணியாளர்கள் பிழை செய்திருந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார், ஒரு முறை தமிழ்நாடு அரசின் முத்திரையை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் போடச்சொன்னதற்க்கு இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முத்திரையை போடக்கூடாதுன்னு கடைசிவரை மறுத்துவிட்டார்.)

”அங்கிள், உங்க அம்மாவ இன்னக்கி விஷ் பண்ணீங்களா???” முன்னிரவில் சந்தித்த நண்பர் ஒருவரின் 8 வயது மகள் கேட்க, அவளே அன்னையர் தினத்தைப்பத்தியும் தான் அம்மாவை விஷ் பண்ணியதையும் தொடர்ந்துகொண்டிருந்தாள். ரசத்தில் பெருங்காயத்தை கொஞ்சம் அதிகமா போட்டதற்க்காக கடிந்துகொண்டே மதியம் சாப்பிட்டது நினைவிற்க்கு வந்தது.....

(அன்னையர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒண்ணு உண்டு..... வருடம் முழுதும் தங்களுக்காக வீட்டில் சுழலும் அம்மாவை அன்னையர் தினத்தன்று சந்தோசப்படுத்த முடிவு செய்து இரவு முழுவதும் பயண ஏற்ப்பாடுகள் செய்கிறார்கள், அம்மாவோ கஷ்டப்பட்டு எல்லாருக்கும் சாப்பாடு தயார்செய்து விட்டு அசதியில் தூங்கிவிடுகிறார்... விடிந்து பார்த்தால் வீட்டில் யாரையும் காணோம், எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாட சென்றுவிட்டார்கள்...)

பலரது வீட்டில் இப்படித்தான் அன்னையை கொண்டாடி வருகிறோம், எங்கள் வீடு உள்பட...

ஜெயா டிவியில் நேற்று மாலை ”கண்ணாடி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகையில் தமிழருவி மணியனின் குரல் கேட்டு ரிமோட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்... சுதந்திர போராட்ட தியாகிகள்/ முன்னால் ராணுவத்தினர் பற்றியும் அவர்களுக்கான அரசாங்கச்சலுகைகள் மற்றும் அதிலுள்ள அவலங்கள் பற்றிய தொகுப்பு நேற்றைய நிகழ்ச்சி.
மலேயாவில் ஒரு கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது ஆறு பவுன் வளையலை அவரிடத்தில் அன்பளிப்பாய் அளித்ததையும், தன்னையும் ராணுவத்தில் இணைத்துக்கொண்டதையும், தற்போதைய வாழ்க்கை சிரமங்களையும் 85 வயது மூதாட்டி விவரிக்க பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்ப்பாளர்கள் முகங்களில் உணர்ச்சிக் கலவைகள்... நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றபோது அவர் அடித்த அந்த சல்யூட்........ அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

Wednesday, May 4, 2011

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்....

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா....

”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே......” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி..... நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது...),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்....

அரங்கு நிறைந்த கூட்டம்.... டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) இருந்த இடமாய் பார்த்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கயில் “தனக்கு பின்னால் பேச இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பிரச்சினை வந்துவிடாமல்” தனது பேச்சை விரைவாக முடித்துக் கொள்வதாக பத்து நிமிடமாக சொல்லிக்கொண்டிருந்தார் மதன் .

உயிர்மை பதிப்பக சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ”உயிர்மை” மாத இதை புரட்டிப்பார்க்கிறேன் பேர்வழி என்று படித்து முடிக்கையில் மதனும் பேச்சை முடித்திருந்தார். அடுத்து பேச இருந்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் மிச்சம், எனக்கு இருபது ரூபாய் மிச்சம் (”உயிர்மை” மாத இதழ் விலை இருபது ரூபாயாம்).

அடுத்து பேச (தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை உஷாராய் கையோடு எடுத்துக்கொண்டு)வந்த சாரு மைக் பிடித்தார். புத்தக கண்காட்சியில் அவரோட தண்ணீர் பாட்டிலை யாரோ ஆட்டய போட்டத பத்தி ரொம்ம வருத்தப்பட்டு அவரோட பிளாக்ல எழுதி இருந்ததை ”இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கிறேன்...” (அய்யய்யோ நமக்கும் ஒட்டிக்கிச்சே....)

இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

சாரு வழக்கம் போல லத்தீன் அமெரிக்க அறிவாளிகளையும் , மலையாளத்து மைனர்களையும் பேச்சில் இழுத்து, பேச்சை இழுத்துக்கொண்டிருக்கயில் சற்றே பார்வையை திருப்பி மேடையை ஒரு அரை வட்டம் சுற்றினேன்.


இடமிருந்து வலமாய்.... சுஜாதாவின் (வெகு நாட்களுக்குப்பிறகு திருமணத்திற்க்கு சம்மதித்த)மூத்த மகன், சாந்தமாய் அமர்ந்திருந்த சுஜாதா(அவருக்குப்பின்னால் இருந்த பேனரில் அதைவிட சாந்தமாய் சுஜாதாவின் முகம்.....)ஆர்மி ஆபீசர் தோரணயில் ஜோ.டி.குருஸ்,ஞானக்கூத்தன் ஆழ்ந்த யோசனையில் மனுஷ்ய புத்திரன், சற்றே அவஸ்தையாய் இ.பா, மோவாயை இடதுகையில் தாங்கிய எஸ்.ரா, காபி அருந்தியபடி பாரதி கிருஷ்ணகுமார், அருகிலே வண்ணதாசன் ( பாக்கெட்டில் பளபளப்பா என்னது சார்???), அடுத்ததாய் ஸ்ரீநேசன், பக்கமாய் யுவகிருஷ்ணா, இடையில் மதன், இறுதியாய் ஹரிகிருஷ்ணன்,

(அமர்ந்திருந்தவர்கள் பிறகு இடம் மாறியிருந்தாலோ, என்னைப்போல பாதியிலே நடையை கட்டியிருந்தாலோ கம்பெனி பொறுப்பாகாது...)

அப்துல்லா, கேபிள், கே.ஆர்,.பி.செந்தில், விந்தைமனிதன், எறும்பு, ”ழ” ரமேஷ் இவர்களோடு ஒரு மினி சந்திப்பு......

பல்லிடுக்கில் மாட்டியிருந்த வேர்க்கடலையை நாக்கால் நெருடியபடி (மீண்டும்) அலுவலகம் வந்து சேர்கையில் மணி சரியாய் ஒன்பது அம்பத்தி எட்டு. விழாவிற்க்கு சென்றுவருவதற்காக பத்து மணிக்கு மாத்தி வைத்திருந்த மீட்டிங்கை அட்டெண்ட் செய்வதற்காய் அவசர அவசரமாய் இருக்கையை ஆக்கிரமித்து Ctrl+Alt+Del அடிக்கையில் ஏனோ அவரின் முகம் ஞாபகம் வந்தது.....
( Ctrl+Alt+Delன் பயன்பாடு பற்றி நான் முதல் முதலாய் தெரிந்து கொண்டதே
சுஜாதாவின் கட்டுரையில் தான்...)

WE MISS YOU SIR........

2011க்கான சுஜாதா விருது பெற்றவர்கள்:
வண்ணதாசன் : படைப்பு : ”ஒளியிலே தெரிவது” (சிறுகதை)
ஜோ.டி.குருஸ் : படைப்பு : ”கொற்கை” (நாவல்)
அழகிய பெரியவன் : படைப்பு : ”பெருகும் வேட்கை” (கட்டுரை)
ஸ்ரீநேசன்: படைப்பு : ”ஏரிக்கரையில் வசிப்பவன்” (கவிதை)
மு.ஹரிகிருஷ்ணன்: படைப்பு : ”மணல் வீடு” (சிற்றிதழ்)
யுவகிருஷ்ணா : படைப்பு : ”பதிவுகள்” (இணையம்)