Sunday, June 19, 2016

மூன்றுவிர‌ல்...


சென்னை, டைடல் பார்க்.வடகிழக்காய் ஓங்கி நிற்க்கும் கட்டிடத்தின் ஆறாவது தளம். மாலை நேர தேநீர் இடைவேளைகளில் அந்த 10க்கு 8 செவ்வக பகுதியை கடந்துசெல்கையில் கண்கள் அன்னிச்சையாக அவரை தேடும்.

ஸ்பீக்கர் போன் வழியே தெறித்துக்கொண்டிருக்கும் கரகரப்பான வெளிதேசத்து குரல்களுக்கு காதையும், லேப்டாப் ஸ்கிரீனுக்கு கண்ணுமாய், இடது கையால் மோவாயை தாங்கியபடி அவர்....

இன்றைக்கு பேசிவிட‌லாம் என்று ஒவ்வொருமுறை நினைத்தாலும் அந்த‌ க‌ர‌க‌ர‌குர‌ல்க‌ள் அமைதியாவ‌த‌ற்கான‌ சாத்திய‌கூறுகள் புலப்படாமல் கடந்துசென்றுவிடுவதுண்டு.

பிறிதொருநாள் சந்திக்கவிழைந்து அனுப்பிய செய்திக்கு "i am happlied retired" என்ற‌ ப‌தில் ஸ்மைலியோடு வ‌ந்து விழுந்தது.

அவ்வ‌ப்போது அவர் பகிர்ந்துகொள்ளும் ப‌ரிவாதினி ஒளிப‌ர‌ப்பும் ச‌ங்கீத‌ நிக‌ழ்வுக‌ள் ப‌த்திய நிலைத்த‌க‌வ‌ல்க‌ள்க‌ளோடு நின்று போன‌து தொட‌ர்பு..

சமீபத்திய புத்த‌க‌ க‌ண்காட்சியில் அவ‌ர‌து புதிய‌ ப‌டைப்பான‌ "டியூப்லே வீதி" வாங்குவ‌தாக‌ நினைத்துக்கொண்டு டிஸ்க‌வ‌ரியில் அவ‌ச‌ர‌க‌தியில் வாங்கிய‌து "மூன்று விர‌ல்".

அவ‌ர் திரு.முருக‌ன் ராம‌சாமி அவ‌ர்க‌ள்.

****

"மென்பொருள்துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் நாவல்"

புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பட்டிருக்கும் வாக்கியத்திற்கு மிகச்சரியாய் நியாயம் செய்திருக்கிறது நாவல்.

அதே துறையை சார்ந்தவன் என்பதாலும்,நாவலில் வரும் ஜெப்ரி போன்ற வெள்ளைக்கார பாசக்கிழவர்களோடு பணியாற்றியிருப்பதாலும்,நாவலின் மையப்பாத்திரமான சுதர்ஸனின் சொந்தஊரான மாயவரம் பகுதியை சேர்ந்தவனென்பதாலும், சுதர்ஸன் படித்த மாயவரம் தேசியமேல்நிலைப்பள்ளியில் படித்தவனென்பதாலும் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்தது நாவல்.

பால‌குமார‌னின் "அப்பம் வ‌டை தயிர்சாத‌ம்" புதினதுக்கு பிற‌கு ம‌ண்சார்ந்த,ம‌ன‌துக்கு நெருக்க‌மான‌தாக‌ உண‌ர‌வைத்த‌ புத்த‌கம்.முந்தைய‌தை போல‌வே முழுவதும் ஒரே மூச்சில் படிக்கவைத்த நாவல்.

***
சுதர்ஸ‌ன்.... நாவ‌லின் மைய‌க்க‌தாப்பாத்திர‌ம்.மாய‌வரம் கோனேரிராஜபுரத்து இளைஞ‌ன். ப‌ன்னாட்டு க‌ம்பெனி ப‌ணியின் வேலைப்பளுவிற்க்கிடையே ப‌க்கிங்காம் அர‌ண்ம‌னையையும், பிக்காட‌லி தெருவையும் சுற்றியப‌டி க‌ழிக்கும் வாழ்க்கை சில‌ வார‌ங்க‌ளில் த‌லைகீழாய் மாற‌ க‌லிபோஃர்னியாவில் பாய‌ச‌வாலியோடு பரிசார‌க‌னாய்.....

மிக‌ நேர்த்தியாய் நாவ‌லுக்குள் ந‌ம்மை மென்மையாக‌ இட்டுச்செல்லும் எழுத்து நடை.புன்முறுவலையும்,சிறு படபடப்பையும் உண்டுபண்ணும் அத்தியாய‌ங்க‌ளின் தொட‌க்க‌மும் முடிவும்.

"ந‌ல்ல‌வேளை ஒட்ட‌க‌த்தை ந‌ட‌த்திக்கூட்டிக்கொண்டு எம்பி இத‌ழ் ப‌தித்த‌ப‌டி யாரும் த‌ட்டுப்ப‌ட‌வில்லை" பிக்காட‌லி தெரு லிப்லாக் முத்த‌ங்க‌ளை ம‌னித‍னுக்கும் ஒட்ட‌க‌த்திற்குமிடையேயான ஒப்பீடு.

கிண்டியை "குயிண்டி" என்று சொல்லும் ப‌ர்மிங்காம் ச‌ர்தார்ஜி தொழில‌திப‌ர்.

நாவ‌லெங்கிலும் தென்ப‌டும் ப‌க‌டி.

"க‌த‌ர் ச‌ட்டை,க‌ரை வேட்டி,சிக‌ப்பு துண்டு,க‌ருப்பு ச‌ட்டை,ப‌ச்சை துண்டு"

சுத‌ர்ஸ‌னின் அப்பாவுக்கு அனைத்துக‌ட்சி ஆட்க‌ளும் ப‌ரிச்ச‌ய‌ம் என்ப‌தை ஒற்றை வ‌ரியில் தெரிவிக்கும் லாவ‌க‌ம்.

ப‌டிக்கும் வாச‌க‌னுக்கு அன்னிய‌மாய் தெரியாமல் நாவ‌ல் முழுவ‌தும் வியாபித்திருக்கும் தொழில்நுட்ப‌ விவ‌ர‌ணைக‌ள்.

"நாளை பிள்ளை குட்டின்னு பிற‌ந்தா, அது நாம‌ம் போட்டுக்கிட்டு இடுப்புல‌ ப‌ட்டுத்துணி த‌ழைய‌த்த‌ழைய‌க் க‌ட்டிக்கிட்டு வெண்பொங்க‌ள் சாப்பிடுமா, இல்லே விடிஞ்சு எழுந்த‌தும் ப‌சியாற‌ சிக்க‌ன் ப‌ர்க‌ரைக் கொண்டான்னு கேட்குமா?"

இரு வேறு க‌லாச்சார‌ பிண்ண‌னி கொண்ட‌ ஜோடிக‌ளின் சிக்க‌ல் நிறைந்த‌ பிர‌ச்சினையை இருவ‌ரிக‌ளில் ப‌ட்டென்று புரிய‌வைப்ப‌தாக‌ட்டும்,

"அது அது ந‌ட‌க்கும்போது பார்த்துக்க‌லாமே சார்... இப்ப‌ப்பிடிச்சு இதையெல்லாம் ப‌த்திக் க‌வ‌லைப்ப‌ட்டிருந்தா மூச்சு முட்ட‌ ஆர‌ம்பிச்சிடும்..."

அடுத்த‌ ப‌த்தியிலேயே அத‌ற்கான‌ தீர்வையும் முன்வைப்ப‌தாக‌ட்டும்.பல

இடங்களில் நாவல் வாழ்விய‌லை வகைவ‌கையாய் வ‌ரிசைப்ப‌டுத்துகிற‌து.

நாவலின் 50வ‌து அத்தியாய‌த்தில் அட்ட‌காச‌மான‌ ஒரு ப‌த்தி....

"வாழ்க்கை அத‌ன் போக்கில் ந‌க‌ர்ந்துகொண்டிருக்கிற‌து" என்று ஆர‌ம்பிக்கும் ப‌த்தி, "நாற்காலி இடைவெளியில் மாட்டிக்கொண்டு க‌ண்சிமிட்டும் குண்டூசி".

"கணேஷின் மூக்குக்கண்ணாடியில் பவுடர் துகள்கள்"

"இரண்டு முறை இழுத்தால தண்ணீரை பொழியும் ஃபிளஷ்.

சுத‌ர்ஸ‌ன் கதாப்பாத்திர‌த்தை கால‌நிலையோடு ஒப்பிட்டு எழுதப்ப‌ட்டிருக்கும் அந்த 21வ‌ரிக‌ளில்...

நாவலில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ப‌குதி. சுதர்ஸனை மையச்சரடாய் வைத்து இயங்கும் ர‌ங்கா,ஜெப்ஃரி,அவ்தார்சிங்,ச‌ந்தியா,புஷ்பா,தாங்க்லோர் க‌தாபாத்திர‌ங்க‌ள்...

நாவ‌லில் என்ன‌ள‌வில் குறையாக‌ ப‌ட்ட‌ இரு விச‌ய‌ங்க‌ள்.

நாவ‌லுக்கு சுப‌ம்போட‌ வ‌லிந்து திணிக்க‌ப்பட்‌ட‌தாய் தோன்றும் க‌ண்ணாத்தா க‌தாப்பாத்திரம்.

க‌தையோடு நியூயார்க் ந‌க‌ர‌ இர‌ட்டை கோபுர‌ங்க‌ள் தொட‌ர்புப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ விதம். 360ம் ப‌க்க‌ம் வ‌ரை மிக‌யாதார்த‌மாக‌ செல்லும் நாவ‌ல் முடிவில் கொஞ்ச‌ம் ச‌ராச‌ரி நாவ‌லை பிர‌திப‌லிக்கிற‌து.

மிக‌ச்ச‌மீப‌மாய் ப‌டித்த‌ புத்த‌க‌ங்க‌ளில் மிக‌வும் பிடித்த‌தாகிப்போனது மூன்றுவிர‌ல்.

**************************
ஆசிரிய‌ர் : இரா.முருக‌ன்

ப‌திப்ப‌க‌ம் : கிழ‌க்கு

ISBN : 978-81-8368-073-8

விலை : 215 ரூ.
**************************

Saturday, August 29, 2015

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி.


”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.


”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்”


இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம்.

”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் இருக்கமே!!!!"  பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்ந்தே கொண்டுவரும் சம்பவங்கள்,...


நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி".
இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே
சமர்ப்பித்திருக்கிறார்.

ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால
தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import"

சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்).

நாகர்கோவில்-> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள்.


திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தமுழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.

”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால்,
என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?”

“தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா...

“சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை....

படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்ப்படுத்தும் சம்பவங்கள்.

மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது.
மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் சரவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது...

”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது
தெரியாமலிருக்க வாய்ப்பில்லை..,

”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும்.

தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்....

ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்ப்பட்ட குழப்பம்,

இன்னும் பல பல விஷயங்கள்.....

”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம்.

“கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு
முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார்.

(சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும்.

சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான
தேசிய விருதை  தனதாக்க்கிக்கொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,....

“தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில
கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்.

பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!"

வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்????

*************************************
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

பாரதிமணி

வம்ஸி புக்ஸ்

ISBN # 978-93-84598-06-8

விலை : ரூ. 550.
*************************************


www.vazhippokkann.blogspot.com









Monday, August 17, 2015

செம்பருத்தி...


அண்ணன் தம்பி மூவர், அவர்தம் வாழ்க்கைத்துணைகள், கொண்டதும் பெற்றதும். இவர்களை சுற்றி சுமார் 35 வருடங்களுக்கு நடக்கும் சம்பவங்கள். இவைகளே நாவலின் அடிநாதம்.

காலயெந்திரத்திலேறி சென்று கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடச்செய்யும் தி.ஜா வின் வசீகர எழுத்து மற்றும் சொல்லாடல்கள்...

கதை,கதாபாத்திரங்கள்,கால சூழ்நிலைகள் (முதற்பதிப்பு 1968) இம்மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்து அதை நேர்கோடாக நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை கொண்டுசெல்வதென்பதை நினைத்து பார்த்தாலே மூச்சு முட்டிக்கொண்டுவருகிறது (தி.ஜாவின் பாணியிலே).


’உடனே புறப்பட்டு வரவும்,அவசரம்.’ தந்தி அடிக்கிறவர்கள் செய்தியை ஒரு கோடி காட்டினால் தான் என்ன? மனிதர்களை கலக்குவதற்காகவே இப்படி ஒரு கருவி,அதற்கு ஒரு இலாகா, அதற்க்கு இத்தனை ஆட்கள்!”

மனிதர்களை 24/7 அந்நிலமையிலேயே வைத்திருக்கும் தற்ப்போதைய தொழில்நுட்ப விஷயங்களை தி,ஜா எவ்வாறு கையாண்டிருப்பார்??

ரத்தத்தை கொதிக்க வைக்கும் மனிதர்கள்,சொற்கள்,நிகழ்ச்சிகள் என்று பலவற்றை பற்றி புவனாவிடம் சட்டநாதன் சொல்லிக் குமுறியதுண்டு. அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அவனோடு சற்றுக் குமுறுவது போலவும் அழுவது போலவும் செய்துவிட்டுக் கடைசியில் அன்று சொன்ன மாதிரி ஒரு அற்ப விஷயத்தைச் சொல்லிச் சிரிப்பில் கொண்டு முடித்துவிடுவாள்”.


1968 - 2015 எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய விஷயமல்லாவாவிது!!!


இடக்கரடக்கல்” - நாவலின் ஒரு இடத்தில் கோடிட்டுக்காட்டப்படும் சொல். கமலஹாசனும் தி.ஜாவைப் படிப்பார் போல...


அசிகை” - முதல் முதலாய் கேள்விப்படும் ஒரு சொல்லாடல்.


பெரிய உடம்பு. மாநிறம். உடம்புக்கேற்ற பெரிய தலை. மொட்டைத்தலை. உடம்பெல்லாம் விபூதிப்பட்டை. கழுத்தில் ஒரு ருத்திராட்சை மாலை. இடையில் செங்கல் பார்டரில் ஒரு ஜரிகை வெண்பட்டால் கச்சம். ஒரு கட்டம் போட்ட சிவப்பு பட்டை இடையில் சுற்றியிருந்தது.வெறும் உடம்பு, ரோமம், மச்சம் ஏதுமின்றித் திருநீறும் சந்தனமுமாகச் சுருக்கமின்றிப் பளபளத்தது. நடு வயதைக் கடந்ததாலோ என்னவோ தசை மட்டும் சற்று எலும்பை விட்டுக் கட்டு கழன்றிருந்தது. லேசாகத் தொந்தி. காலிலும் கையிலும் நீள நீளமாக விரல்கள். பெரிய நகங்கள்”.


உருவத்தை உருவகப்படுத்தும் வார்த்தை ஜாலம்.


நாவலை எவ்வாறு படிக்கவேண்டுமென்று பா.ரா ஒரு விளக்கமே கொடுத்திருக்கிறார்....

http://www.writerpara.com/paper/?p=10497
"நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை".



(வைக்கோல் போர் இருந்த இடம் இப்போது கார்ஷெட் ஆகிவிட்டபடியால் எனக்கு அழுக்கு போர்வை மட்டுமே, கூடவே எங்கள் வீட்டு செம்பருத்தி மரமும்).


---------------
செம்பருத்தி
தி.ஜானகிராமன்
காலச்சுவடு
விலை :400 ரூ
---------------

Sunday, February 15, 2015

இரயில் புன்னகை.



1982-84ல் வெளியான 8 கதைகளின் தொகுப்பு.

”கச்சேரிக்கிடையே என்னத்த வாயில போட்டுக்கிறாருன்னு போயி பாத்திட்டு வா” அரியக்குடியின் தோடியில் லயிக்காமல் அவரின் தொண்டையில் கவனம் குவித்த சுஜாதாவின் மாமா, தன்னுடைய தொல்காப்பிய மேற்கோள்களை புறந்தள்ளி மூச்சிரைப்பை முக்கியமாக்கிய எழுத்தாள நண்பர் என தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் ஆரம்பிக்கிறது அவதானிப்பு பற்றிய சுஜாதாவின் முன்னுரை,

முதல் கதை “இரயில் புன்னகை”. தமிழக இளைஞனொருவன் பம்பாயின் ஜனத்திரலில் மெற்க்கொள்ளும் ஒரு ரயில் பயணம், சற்றுமுன் பார்த்து புன்னகைத்த அந்த தமிழ் முகம் தண்டவாளத்தில் சடமாய் கிடக்க, அலைகழிக்கும் அன்றாடத்தை நொந்தபடி முன்னிட்டு அலுவலகம் செல்லும் சாமிநாதன் கதாபாத்திரம். மனம்பொறுக்காமல் இறந்தவனின் வீடு நோக்கி விரையும் சாமி, இறந்தவனின் வீடு எப்படியும் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும் சந்தோசத்தில் அடுத்த ஆள் தேட ஆரம்பிக்கும் அபார்ட்மெண்ட் மேனேஜர். “இறந்தவனுக்கும் உனக்கும் என்ன உறவு?” மேனேஜரின் கேள்விக்கு புன்னகையை பதிலாக தரும் சாமிநாதன்.

குதிரை கடித்ததால் கிருஷ்ணசாமி ”குதிரை கிச்சாமி” ஆகும் ”குதிரை” கதை.

150 பிராங்க் காட்டன் சட்டையைவிட சல்லிசாக 250ரூவாய்க்கு விழுப்புரத்தில் வாங்கிவந்த ”பாரீஸ் தமிழ்பெண்” பெண்குழந்தை.

ஊர்தோரும் தேதிவாரியாக விஜயம் செய்யும் டாக்டர் ராஜ், அவரை பேட்டி காண குறுக்குவழியில் செல்லும் நிருபர். லேகியத்தை வாழ்க்கைக்காக வரித்துக்கொண்டிருந்தாலும் M.A இங்கிலீஷ் படிச்சதையும், இயற்க்கை வைத்தியத்துக்கு தூதுளங்கொடி தேடியலைந்ததையும் ”முழு வைத்தியன்” கதையில் அசுரத்தையாய் விவரிக்கும் டாக்டர் ராஜ்.

”அரை வைத்தியன் ” கதையில் தொழில்தர்மம் பேசும் டாக்டர் சீனிவாசராவ்.

பாதியில் நிறுத்த மனசில்லாமல் பல ஸ்டாப்பிங் தாண்டி இறங்க வைத்த புத்தகம்...


இரயில் புன்னகை.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்..
ரூ.45.

நகரம்.



1971-72 காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 14 கதைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் தலைப்பான “நகரம்” கதை நகரத்தின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒரு கிராமத்து பெண்ணுக்கு எப்படி அன்னியப்பட்டு இருக்குறது என்பதை அழகாய் உணர்த்துகிறது. 40 வருடம் கழித்தும் நம்மால் இயல்பாக கதைக்களத்தையும் அதன் சூழலையும் நிகழ்காலத்தில் பொறுத்திப்பார்க்க இயலும்.

வாத்தியார் வாத்தியார் தான்....


நகரம்.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்.
ரூ.75.

சஞ்சாரம்.



ஆவணப்படமாகவோ, ஆராய்ச்சிக்கட்டுரையாகவோ வந்திருக்க வேண்டிய கரு. தன்னுடைய களப்பணியினாலும், தேணுகா, பி.யெம் சுந்தரம் முதலிய இசை விமர்சகர்கள் வழி திரட்டிய தகவல்கள் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் கலைஞருக்கு இயல்பாய் கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் கரிசல்மண்ணின் கலைஞர்களுக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் கொஞ்சம் அதிகமான புனைவுகள் சேர்த்து நாவலாக்கியிருக்குறார் எஸ்.ரா.


பக்கிரி, ரத்தினம். கரிசல்மண்ணின் நாதஸ்வர கலைஞர்கள். கோவில் திருவிழாவிற்க்கு வாசிக்க செல்லும் இவர்கள், முதல்மரியாதை சம்பந்தமாக இரு ஊர்காரர்களுக்கிடையே ஏற்படும் தகறாரில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆத்திரப்படும் பக்கிரி கோவில் பந்தலை தீ வைக்க, பக்கிரியும் ரத்தினமும் ஊர் ஊராக தலைமறைவு வாழ்கிறார்கள்.

பக்கிரியின் நினைவலைகளில் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை நாவல் விரிகிறது. ஆங்காங்கே நிறைய கிளைக்கதைகள். ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதைகள் அசுவாரஸ்யமாக பக்கங்களை நிரப்புகின்றன.

கரிசல்மண்ணின் வாத்திய கலைஞர்களின் ஆதங்கங்களை பதிவுசெய்திருக்கும் வகையில் இந்நாவல் முக்கியத்தும் பெறுகிறது.


சஞ்சாரம்.
எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம்.
ரூ.370.

தண்ணீர்.


”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”.

”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை.

“தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார்.

1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது.

தண்ணிலாரியின் ஹாரன் சத்தம் கடவுளின் அசரீரியாய் கேக்கும் பரபரப்புகள் நிறைந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வாழும் ஜமுனா அவரது தங்கை சாயா. இவர்களிருவருக்கிடையில் நடக்கும் சம்பாஷணைகள்,வருத்தங்கள், சந்தோஷங்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிரும்பும் ஜமுனா. தன்போக்கிற்க்கு இழுத்துபிடிக்கும் சாயா.

முடிவற்று முடியும் நாவல்....

(சில வாரங்களுக்கு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தண்ணீர் நாவலைத்தழுவி திரைப்படம் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது)


தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
ரூ.115.