Sunday, May 8, 2011

கிறுக்கல்கள் - 08-05-2011.

இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை...
சென்னையில் பல இடங்களிலும், மயிலாடுதுறையில் இரு முறையும் சரிசெய்து கொண்டேன்.

கொஞ்சம் ஆச்சரியம் தான்... பொதுவாக ஒரு கடையில் பொருள் வாங்கும்போது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இது போல ஃப்ரீ சர்வீஸ் செய்து கொடுப்பார்கள். ஆனால் எந்தக்கடையில் வாங்கியதாக இருந்தாலும் கண்ணாடிக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குவதில்லை... ஏன்??? தெரிந்தால் சொல்லுங்களேன்....

குரோம்பேட்டை MIT மேம்பாலத்தை வழக்கம்போல் வாகனங்களை முந்திக்கொண்டு கடக்கையில் தென்பட்டது எதிரே கிராஸ் செய்த ஒரு டெம்போ டிராவலர் “நயிநார் டிராவல்ஸ்” என்ற முகப்போடு... அடடா.. என்ன ஒரு தமிழ் ”படுத்து”தல்.சொன்னவருக்கு தெரியவில்லையேனில் எழுதியவருக்காவது தெரிய வேண்டாமா???

(மாயவரத்தில் “பாப்புலர் டிஜிட்டல் பிரஸ்” என்று ஒரு அச்சகம் இருக்கிறது. இங்கு அச்சடிக்கப்படும் அனைத்து வாசகங்களும் அச்சக ஓனர் படித்துப்பார்த்த பிறகே அச்சுக்கு அனுமதி அளிக்கப்படும். கொடுக்கின்ற காசில் முன்னபின்ன இருந்தாலும் அட்ஜட் செய்துகொள்ளும் அவர் , பிரசுரிக்கப்படும் வாசகங்களிலோ/எழுத்திலோ அச்சக பணியாளர்கள் பிழை செய்திருந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார், ஒரு முறை தமிழ்நாடு அரசின் முத்திரையை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் போடச்சொன்னதற்க்கு இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முத்திரையை போடக்கூடாதுன்னு கடைசிவரை மறுத்துவிட்டார்.)

”அங்கிள், உங்க அம்மாவ இன்னக்கி விஷ் பண்ணீங்களா???” முன்னிரவில் சந்தித்த நண்பர் ஒருவரின் 8 வயது மகள் கேட்க, அவளே அன்னையர் தினத்தைப்பத்தியும் தான் அம்மாவை விஷ் பண்ணியதையும் தொடர்ந்துகொண்டிருந்தாள். ரசத்தில் பெருங்காயத்தை கொஞ்சம் அதிகமா போட்டதற்க்காக கடிந்துகொண்டே மதியம் சாப்பிட்டது நினைவிற்க்கு வந்தது.....

(அன்னையர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒண்ணு உண்டு..... வருடம் முழுதும் தங்களுக்காக வீட்டில் சுழலும் அம்மாவை அன்னையர் தினத்தன்று சந்தோசப்படுத்த முடிவு செய்து இரவு முழுவதும் பயண ஏற்ப்பாடுகள் செய்கிறார்கள், அம்மாவோ கஷ்டப்பட்டு எல்லாருக்கும் சாப்பாடு தயார்செய்து விட்டு அசதியில் தூங்கிவிடுகிறார்... விடிந்து பார்த்தால் வீட்டில் யாரையும் காணோம், எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாட சென்றுவிட்டார்கள்...)

பலரது வீட்டில் இப்படித்தான் அன்னையை கொண்டாடி வருகிறோம், எங்கள் வீடு உள்பட...

ஜெயா டிவியில் நேற்று மாலை ”கண்ணாடி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகையில் தமிழருவி மணியனின் குரல் கேட்டு ரிமோட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்... சுதந்திர போராட்ட தியாகிகள்/ முன்னால் ராணுவத்தினர் பற்றியும் அவர்களுக்கான அரசாங்கச்சலுகைகள் மற்றும் அதிலுள்ள அவலங்கள் பற்றிய தொகுப்பு நேற்றைய நிகழ்ச்சி.
மலேயாவில் ஒரு கூட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது ஆறு பவுன் வளையலை அவரிடத்தில் அன்பளிப்பாய் அளித்ததையும், தன்னையும் ராணுவத்தில் இணைத்துக்கொண்டதையும், தற்போதைய வாழ்க்கை சிரமங்களையும் 85 வயது மூதாட்டி விவரிக்க பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்ப்பாளர்கள் முகங்களில் உணர்ச்சிக் கலவைகள்... நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றபோது அவர் அடித்த அந்த சல்யூட்........ அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

Wednesday, May 4, 2011

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்....

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா....

”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே......” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி..... நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது...),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்....

அரங்கு நிறைந்த கூட்டம்.... டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) இருந்த இடமாய் பார்த்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கயில் “தனக்கு பின்னால் பேச இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பிரச்சினை வந்துவிடாமல்” தனது பேச்சை விரைவாக முடித்துக் கொள்வதாக பத்து நிமிடமாக சொல்லிக்கொண்டிருந்தார் மதன் .

உயிர்மை பதிப்பக சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ”உயிர்மை” மாத இதை புரட்டிப்பார்க்கிறேன் பேர்வழி என்று படித்து முடிக்கையில் மதனும் பேச்சை முடித்திருந்தார். அடுத்து பேச இருந்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் மிச்சம், எனக்கு இருபது ரூபாய் மிச்சம் (”உயிர்மை” மாத இதழ் விலை இருபது ரூபாயாம்).

அடுத்து பேச (தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை உஷாராய் கையோடு எடுத்துக்கொண்டு)வந்த சாரு மைக் பிடித்தார். புத்தக கண்காட்சியில் அவரோட தண்ணீர் பாட்டிலை யாரோ ஆட்டய போட்டத பத்தி ரொம்ம வருத்தப்பட்டு அவரோட பிளாக்ல எழுதி இருந்ததை ”இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கிறேன்...” (அய்யய்யோ நமக்கும் ஒட்டிக்கிச்சே....)

இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

சாரு வழக்கம் போல லத்தீன் அமெரிக்க அறிவாளிகளையும் , மலையாளத்து மைனர்களையும் பேச்சில் இழுத்து, பேச்சை இழுத்துக்கொண்டிருக்கயில் சற்றே பார்வையை திருப்பி மேடையை ஒரு அரை வட்டம் சுற்றினேன்.


இடமிருந்து வலமாய்.... சுஜாதாவின் (வெகு நாட்களுக்குப்பிறகு திருமணத்திற்க்கு சம்மதித்த)மூத்த மகன், சாந்தமாய் அமர்ந்திருந்த சுஜாதா(அவருக்குப்பின்னால் இருந்த பேனரில் அதைவிட சாந்தமாய் சுஜாதாவின் முகம்.....)ஆர்மி ஆபீசர் தோரணயில் ஜோ.டி.குருஸ்,ஞானக்கூத்தன் ஆழ்ந்த யோசனையில் மனுஷ்ய புத்திரன், சற்றே அவஸ்தையாய் இ.பா, மோவாயை இடதுகையில் தாங்கிய எஸ்.ரா, காபி அருந்தியபடி பாரதி கிருஷ்ணகுமார், அருகிலே வண்ணதாசன் ( பாக்கெட்டில் பளபளப்பா என்னது சார்???), அடுத்ததாய் ஸ்ரீநேசன், பக்கமாய் யுவகிருஷ்ணா, இடையில் மதன், இறுதியாய் ஹரிகிருஷ்ணன்,

(அமர்ந்திருந்தவர்கள் பிறகு இடம் மாறியிருந்தாலோ, என்னைப்போல பாதியிலே நடையை கட்டியிருந்தாலோ கம்பெனி பொறுப்பாகாது...)

அப்துல்லா, கேபிள், கே.ஆர்,.பி.செந்தில், விந்தைமனிதன், எறும்பு, ”ழ” ரமேஷ் இவர்களோடு ஒரு மினி சந்திப்பு......

பல்லிடுக்கில் மாட்டியிருந்த வேர்க்கடலையை நாக்கால் நெருடியபடி (மீண்டும்) அலுவலகம் வந்து சேர்கையில் மணி சரியாய் ஒன்பது அம்பத்தி எட்டு. விழாவிற்க்கு சென்றுவருவதற்காக பத்து மணிக்கு மாத்தி வைத்திருந்த மீட்டிங்கை அட்டெண்ட் செய்வதற்காய் அவசர அவசரமாய் இருக்கையை ஆக்கிரமித்து Ctrl+Alt+Del அடிக்கையில் ஏனோ அவரின் முகம் ஞாபகம் வந்தது.....
( Ctrl+Alt+Delன் பயன்பாடு பற்றி நான் முதல் முதலாய் தெரிந்து கொண்டதே
சுஜாதாவின் கட்டுரையில் தான்...)

WE MISS YOU SIR........

2011க்கான சுஜாதா விருது பெற்றவர்கள்:
வண்ணதாசன் : படைப்பு : ”ஒளியிலே தெரிவது” (சிறுகதை)
ஜோ.டி.குருஸ் : படைப்பு : ”கொற்கை” (நாவல்)
அழகிய பெரியவன் : படைப்பு : ”பெருகும் வேட்கை” (கட்டுரை)
ஸ்ரீநேசன்: படைப்பு : ”ஏரிக்கரையில் வசிப்பவன்” (கவிதை)
மு.ஹரிகிருஷ்ணன்: படைப்பு : ”மணல் வீடு” (சிற்றிதழ்)
யுவகிருஷ்ணா : படைப்பு : ”பதிவுகள்” (இணையம்)

Monday, January 3, 2011

திரும்பி பார்க்கிறேன்...



.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



அப்பாடா...... இன்னக்கித்தான் நிம்மதியா திரும்பிபாக்க முடியுது.கழுத்து வலியால ஒரு வாரமா திரும்பிபாக்கவே முடியல..........


Sunday, January 2, 2011

WTC (உலக வர்த்தக மையம்) - சற்றுமுன்.....



”ஆன்சைட் கால் இன்னக்கி கேன்சல்......... நியூயார்க்ல ஏதோ டெரரிஸ்ட் அட்டாக்காம்........... இன்னும் ரெண்டு மூணு நாளக்கி எந்த காலும் கிடையாது.........”
அரைநாள் பள்ளிவிடுமுறையை ரோட்டோர மழைத்தண்ணீரை எத்தித்தள்ளி அனுபவித்தப்படி செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் 2001ல் வீட்டுக்கு கிளம்பிய எனக்கு
தெரிய ஞாயமில்லை 2006ல் கட்டிட சிதைவுகளின் குவியலினூடே நின்றுகொண்டு என் செயலை நினைத்துப்பார்க்கப்போகிறேன் என்பது.....


சென்ற வாரம் மீண்டும் ஒரு விஜயம்............ எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு முறை வரும் கண்ணீர்த்திரையை தடுக்க முடிவதில்லை........










கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.........








புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வளாகம் ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியது....
1. ஐந்து அலுவலக கட்டிடங்கள் (ஐந்தில் ஒரு கட்டிடம் 1,776 அடியில் அமெரிக்காவின் உயரமான கட்டிடமாக அமையப்போகிறது. 2001ல் தாக்கப்பட்ட டிவின் டவர்ஸின் உயரம் 1,350 அடி. நியூயார்க்கில் இருக்கும் எம்ப்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம் 1,250 அடி)
2. நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்
3. தொடர்வண்டி போக்குவரத்து மையம்
4. வணிக வளாகம்
5. கலைப்பேரரங்கம் (”Performing arts center” ஐ தமிழ்ப்படுத்த நான் படுத்தியதை பழமைபேசி மன்னிப்பாராக....)

21ம் நூற்றாண்டின் தலைசிறந்த கட்டிடங்களாக இவை இருக்கவேண்டுமென்பதில் முழுமுனைப்போடு செயல்படுகிறது கட்டுமானப்பொறுப்பேற்றிருக்கும் சில்வர்ஸ்டீன் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம்.

சிறப்பான செயல்பாட்டிற்க்காக கட்டுமான நிறுவனத்தின் தலைவர் லேரி சில்வர்ஸ்டீன் 2010ம் ஆண்டிற்க்கான சிறந்த தொழிலதிபர் விருதைப் பெற்றுள்ளார்.


உலக வர்த்தக மையத்தின் தற்போதைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தை நோண்ட, கொத்தனார் இன்னக்கி எத்தனை அடி பூச்சு பூசினார், சித்தாள் எத்தனை சட்டி மண் சலித்தார் என்கிற ரேஞ்சுக்கு விலாவரியாக அப்டேட் செய்கிறார்கள்...

{{{
புகைப்படங்கள் : என் காமிராவில் எடுக்கப்பட்டவை.
WTC பற்றிய தகவல்கள் : கூகுளாண்டவர்....
}}}

Saturday, January 1, 2011

நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்..........

சென்ற வாரம் நியூயார்க் நகரின் பிரதான பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டி காலை 3 மணிக்கு எழுந்து .......முடித்து, ........டித்து...........த்து .............. து........ (நான் மட்டும் காலைல எழுந்த உடனே புதுசா என்ன பண்ணிடபோறேன்....... எல்லாரும் பண்ணுறதுதான்) காரில் அமர்ந்து ஜன்னல் வழிவந்த பனிக்காற்றை புறந்தள்ளி, இதமான செயற்க்கை வெப்பத்திற்க்கு உடம்பைக்கொடுத்து வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் விரட்ட ஆரம்பித்தேன், துணையாய் காதின்வழி நரம்பில் ஊடுருவும் கதிரியின் சாக்ஸபோன்...............


நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில் காரை சொருகி, ஆறாவது அவென்யூ நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் மணி 6.30. பலமுறை நியூயார்க் சென்றிருந்தாலும் பின்னிரவு கேளிக்கைகள் முடிந்து, நகரம் சற்றே சாவகாசமாய் இருக்கும் காலை நேரத்தில் செல்வது இதுவே முதல் முறை.

வந்த வேலை முடித்து சற்றே ஆசுவாசமாய் தெருக்களில் நடக்க தொடங்கினேன் கழட்டிவிட்ட எருமை போல (நன்றி விக்னேஸ்வரி). கழுத்தில் கேமராவுடன் நிதான நடையில் தெருக்களை விழுங்கி தனிமையில் சுத்துவதில் தனி சுகம்.

டைம் ஸ்கொயர் பகுதி







சைக்கில் கேப்பில் காரை நுழைக்கும் நம்ம ஊர் ஆட்கள். நியூயார்க்கில் ஓ(ட்)டும் பெரும்பாலான டாக்ஸி-டிரைவர்கள் இந்தியர்கள், கூடவே நமது எல்லைக்கோட்டவர்களும்...




கூட்டங்கூட்டமா கிளம்பிட்டாய்ங்க.........









ஆரவார தெருக்கள் அமைதியாய்.............








கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகும் “ராக்-பில்லர் சென்டர்”





Friday, December 31, 2010

புது வருட Resolution.....

புது வருட Resolution.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..






(தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...............)

Saturday, December 4, 2010

ஸ்மைல் பிளீஸ்.........

டேய்........ பேட்டரி மூணு மணி நேரமா சார்ஜ் ஆயிடுச்சி.... முத போட்டாவா யென்ன யெடு..........


முண்டா பனியனுடன் முறைப்பாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த நண்பனை புதிதாய் வாங்கிய நிக்கான் கேமராவில் விழுங்கினேன்.


’கிளிக்’............. இந்த சத்தம் காதில் ரீங்காரமிடும்பொதெல்லம் மனசு அவரை நினைத்துகொள்ளும்.....


அவர்................. மாயவரம் நியூ போட்டோ ஸ்டூடியோவின் ஆஸ்தான போட்டோகிராபர் மற்றும் ஸ்டூடியோவின் 'ஆல்-இன்-ஆல்'.


சின்ன வயசில் முதல் முறையாய் போட்டோ எடுக்க என்னயும், அக்காவயும் அம்மா அங்கு கூட்டி செல்கையில் புது பேண்ட் சட்டை வாங்கி கொடுத்தால்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்னு அடம்பிடித்த என்னை பளீர்ன்னு முதுகில் அம்மா ரெண்டு போட "புள்ளய அடிக்காதம்மா, இங்க வாடாப்பா"ன்னு என்னை அருகில் இழுத்து மடியில் அமர்த்தி தனக்காக வாங்கி வைத்திருந்த டீயில் பன்னை நனைத்து வாயில் ஊட்ட அழுகயை நிறுத்தினேன் நான்.


ஒழுகிய மூக்கை நாலு முழ வேட்டியின் உள்முனையில் துடைத்தவர் "பாரு, அழுததுல பௌடரெல்லாம் அழிஞ்ச்சிபோச்சி"ன்னு சொல்லிக்கிட்டே பௌடரை மூஞ்சில் அப்பிவிட்டு அக்காவின் பக்கத்தில் இருந்த உருலையில் என்னை தூக்கி நிப்பாட்டி ”சிரிடா ராஜா, ஆங்..... இங்க பாரு.......... ஆங்.............."


’கிளிக்’...........................


(நான் கேட்ட முதல் ‘கிளிக்’ சத்தம்.... இன்னக்கி தான் கேட்டது போல இருக்கு... இடையில் தான் எத்தனை வருடங்கள். பீரோவில் இன்றும் பத்திரமாய் இருக்குறது அந்த போட்டோ..........)


அக்டோபரில் லீவில் ஊருக்கு போனபோது நியூ போட்டோ ஸ்டூடியோவை கடந்து போக எத்தனிக்கயில் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சட்டென்று உள்ளே செல்ல, முன்னறை கல்லாப்பெட்டியில் இருந்த ரெட்டைநாடி சாரீரம் "உள்ள போங்க சார்"ன்னு கைகாட்ட, கருநீல துணியை விலக்கியபடியே இருளறைக்குள் பிரவேசித்தேன் நான்.


"கணுக்கால் பக்கம் கொசுவத்த சரிபண்ணிவிட்டுக்கம்மா, ம்ம்.......... இப்ப சரியா இருக்கு, அப்படியே நிமுந்து பாரு..... ம்..... தலய லேசா இந்த பக்கம்.......
ஆங்....... போதும் போதும்" என்றவாறே போகஸ் லைட்டுக்கும் அந்த பெண்ணிற்க்கும் இடையே கபடி ஆடிக்கொண்டுருந்தார் சாமி.


"சாமி.......... போட்டோ படம் யெப்ப ரெடியாவும்?"


கல்யாணி கவரிங் நெக்லஸை கழட்டிக்கொண்டே கேட்ட பெண்ணிடம் "ஏழே முக்கால் பஸ்ஸுலதான ஊருக்கு
போற, வாங்குற சாமானெல்லாம் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு போறப்போ வந்து வாங்கிட்டு போ........ அதுக்குள்ள போட்டு வக்கசொல்லுறேன்".


"திரும்பி வரும்போது மணிக்கூண்டுக்கிட்ட புருஷோத்தம இருப்பான், அவன்கிட்ட நெக்லஸை கில்ட் புடிச்சிக்க, போட்டா யெடுக்குறப்ப லைட்டு
வெளிச்சத்துல அங்கங்க கருப்பா தெரியுது. வேணும்னா கில்ட் புடிச்சதுக்கப்புறம் இன்னொன்ணு எடுத்துக்கலாம்."



சுவற்றுப்பக்கம் திரும்பி வேட்டியை உதறி இடுப்பில் இறுக்கியவர் "உங்களுக்கு யென்ன போட்டோ தம்பி?" என்றவரிடம் போட்டோயெடுக்க உள்ளே நுழையவில்லையென்றாலும் அந்த ரூமில் அவருடன் மேலும் சில நிமிடங்கள் இருக்க விரும்பி "பப்.......பாஸ்போட்" என்றேன் .


அதே சுறுசுறுப்பு, அதே நாலு முழம் , அதே வெற்று மார்பு,வேட்டியில் சுருட்டிய மூக்குபொடி டப்பா, சற்றே தளர்ந்த உடல்.


எங்கள் வீட்டில் அனேகமாக அனைவரும் இந்த ரூமில் நின்று, சிரித்து,பல்மூடி, கைகட்டி அவர் சொன்னதை தட்டாமல் செய்திருக்கிறோம்.
உறவினர் ஒருவர் அதே தெருவில் ஸ்டூடியோ வைத்திருந்தபோதும் எங்களுக்கென்னவோ இந்த ரூமின் மேல் ஒரு இனம்புரியாத ஒட்டுதல்.


போட்டோ எடுத்தப்பின் முன்பகுதிக்கு வந்து கம்யூட்டரில் அமர்ந்திருந்தவரிடம் "தம்பிக்கு பாஸ்போட் நாலு காப்பி" என்றவாறே கேமராவை கொடுத்துவிட்டு மூலையில் இருந்த தூக்குவாளியை எடுத்தவரிடம் "சாமி........ நேத்து வாங்கிட்டு வந்த தோசயில வச்சிருந்த தேங்கா சட்டினி ஊசிப்போயிருந்துது..........
தக்காளி சட்டினி வச்சி கட்ட சொல்லுங்க..........." கம்யூட்டர் ஆசாமியின் குரலுக்கு தலையாட்டியவர் என்னிடம் திரும்பி "தம்பி, நீங்க யெங்கயும் கட கண்ணிக்கு போகணும்னா போயிட்டு ஒரு அர மணி நேரத்துல வாங்க, போட்டு வச்சிருப்பாரு வாங்கிக்கலாம்". "யப்பா, தம்பி அவசரமா போட்டோ யெடுக்க வந்துட்டு போல, பிரிண்ட் போடுறதுக்கு முந்தி கொஞ்சம் சேவிங் பண்ணிடு".


சாப்பாடு வாங்க செல்லும் சாமியை பார்த்தபடியே படியிறங்கினேன் நான்.