Friday, January 23, 2015

நெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.




2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் "தல எப்படியாவது உசார் பண்ணுங்க" என்று சொல்லிவைத்து. க‌டைசியில் அவ‌ரும் கைவிரிக்க‌ அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, "ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்" என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது.

"கடல்லியே இல்லியாம்" என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க "அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, அதயுங்கொண்டுபோயி விஷ்ணுபுர இலக்கிய வட்டத்து சந்திப்புல காலிபண்ணிட்டு வண்டேன், ரெண்டாம் பதிப்பு போடறாங்க,சீக்கிர வந்திரும், வாங்கிக்கிங்க..." என்று தேடலுக்கு தற்காலிக முற்றுப்பபுள்ளி வைத்தார், இருவருடங்கள் கழித்து இப்போது கையில் கிடைத்திருக்கிறது. மூணரை வருஷமா பட்டியலில முதலிடத்தில் இருந்தது போனவாரம் தான் நீக்கம் செய்யப்பட்டது.... சரி, விசயத்துக்கு வருவோம்...

தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார். ஒப்பந்த பணியாளர்களாக விருத்தாசலம் பெரியார் போக்குவரத்து கழக பணிமனையில் வேலைக்குசேரும் இம்மூவரின் பார்வையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது நாவல். வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்து சேர்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவர்களிடையே உருவாகும் நேசம், அவரவர்தம் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் சம்பவங்கள் என நம்மை நாவலினுள் விரைவாக இட்டுச்செல்கிறது குணசேகரனின் எழுத்து.

சியெல்லாக பணிமனைக்குள் நடத்துனர்,ஓட்டுனர்,தொழில்நுட்ப பணியாளராக அடியெடுத்து வைக்கும் தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார் எப்படி ஆரம்பத்தில் தலைகால் புரியாமல் அல்லாடுகிறார்களோ அதேபோல் பணிமனையின் வேலை சார்ந்த பயன்பாட்டு சொற்கள் நமக்கும் புரியவில்லை.
பக்கங்கள் செல்லச்செல்ல "யாருப்பா இன்னக்கி நைட்டு ஷிப்டு டெக்னிகலு,23ல கட்டு ஒடஞ்சிருக்குன்னு லாக் சீட்டுல எழுதி வச்சிட்டு போயிருக்காரு டிரைவரு, காலைல 4.40க்கு செட் அவுட்டு, அதுகுள்ளார மாத்திவுட்டுடுங்க" படிக்கும் நாமே ஏயினுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம.

ஒப்பந்த தொழிலாளர்களாய் இருக்கும் அவர்கள் மூவரும் படும் அவஸ்தைகளை ( தமிழினி "பாடுகளை" என்று எழுதிவைத்திருக்கிறது, புத்தகத அறிமுதத்தில் ) நம் கண்கொண்டு பார்க்கும்படியான எழுத்து நடை.

குணசேகரன் தான் ஒரு தொழிநுட்ப பணியாளராய் பணிபுரிவதால் விவரணைகளை மிக நுட்பமாக கையாண்டிடுக்கிறார்.

லைசன்ஸை திரும்ப பெற்றுச்செல்ல பணிமனைக்கு வரும் தமிழரசனும்,ஏழைமுத்தும் எதிர்பாராவிதமாக டூட்டி கொடுக்கப்படுவதும், கோணங்குப்பத்திலுருந்து சென்னைக்கு ஸ்பெஷல் வண்டியாக திருப்பிவிடப்படும்போதும், காயலான்கடைக்கு (கண்மணியின் எழுத்தில் "டவுன் கன்வர்சனுக்கு"காக வந்த, புஷ் ஸ்டார்ட் பொசிஷனில் உள்ள) செல்ல வேண்டிய வண்டியை குலசாமியை வேண்டிக்கொண்டே ஏழை உருட்டிசெல்லும் போதும் நம்மனதும் சேர்ந்து பயணிக்கிறது.
சென்னை பயணவழியில் வரும் மிலிட்டரி மேன் மற்றும் அவரது மகள் பாத்திரங்கள் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை.

பஸ் விருத்தாசலம் டூ கோணாங்குப்பம் டூ சென்னை வந்திருச்சே, போறவழியில "வான்ட் ஆப் டீசல்" ல நின்னுட போகுதே என்னும் பதைபதைப்பு ஏழை, தமிழோடு சேர்த்து நமக்கும் வருகிறது.

கூட்டாளிகள் இருவருக்காக பணிமனையில் பதட்டத்தோடு காத்திருக்கும் அய்யனார், ரியர் ஜாய்ண்டோடு 0064 வண்டியை தேடி சென்னை ரோட்டில் சென்று சந்திப்பதாக கதைமுடிகிறது.

சியெல் வேலை இன்னும் சில நாட்களில் நின்றுவிடும்.வாழ்க்கை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு பழுதாகி நின்றுகொண்டிருக்கும் 0064 நோக்கி செல்கிறார்கள் மூவரும். நீண்டு கிடக்கும் கருப்பு ரிப்பனாய் "நெடுஞ்சாலை".


சமீகமாக படித்தவற்றில் "ஆகா முடிந்துவிட்டதே" என்று ஏங்க வைத்த நாவல். குணசேகரன் அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------

‍‍‍‍‍புத்தக விபரம்:
நெடுஞ்சாலை
தமிழினி பதிப்பகம்
ரூ. 290.

Wednesday, January 14, 2015

"காகிதப் படகில் சாகசப் பயணம்" - புத்தகத்தைப் பற்றி....


தன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார்.

ஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார்.

எழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் "மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்") கண்டிப்பாய் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக நக்கீரன் கோபால் விசயத்தில்.

பெட்டிக்கடைகளின் மெல்லிய இரும்பு கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் வார இதழ்களை இழுத்து த‌மதாக்கிக்கொள்ளும் வாசக மனநிலையிலிருந்து பார்க்கையில் வெள்ளை காகிதம், புத்தகமாய் மாறி வாசகர்கள் கையில் கிடைக்கும்வரை இடம்பெரும் உழைப்புகள்,துரத்தல்கள்,கவலைகள்,துரோகங்கள்,பரிணாமங்கள் தெரியவருகின்றன.

ஆரம்ப கட்டுரைகள் கொடுக்கும் உற்சாகம் கடைசி மூன்றில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

************************************************

புத்தகத்தில் பிடித்த‌ வ‌ரிக‌ள் :

"காத்திருக்க‌ காத்திருக்க‌தானே க‌ரித்துண்டு வைர‌மாகிற‌து." - கருணாகரன்.

"இந்த‌ உல‌க‌த்தில் நீ ம‌ட்டுந்தான் ந‌ல்ல‌வ‌ன்.உன்னை எல்லாரும் தூக்கிவ‌ச்சி கொஞ்ச‌னும்னு எதிர்பார்க்காதே, நாம‌ ந‌டந்துபோற பாதை முழுக்க‌ ரோஜா இத‌ழ்களாலேயே அமைஞ்சிருக்கும் என்று நினைக்காதே, அதில் முட்க‌ளும் இருக்கும்.முட்க‌ளை ந‌சுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் ச‌த்ரிய‌ன். முட்க‌ளை ஒதுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் சாண‌க்கிய‌ன். முள்ளுக்கு ப‌ய‌ந்து ந‌ட‌ப்ப‌தையே நிறுத்திவிட்டால் அவ‌ன் கோழை." ‍‍ - சுதாங்க‌ன்.

************************************************

ஒரு சாமானியனாக‌ ப‌த்திரிக்கையுல‌கில் நுழைந்து த‌கிடுதித்த‌ங்க‌ளையும், த‌ந்திர‌ங்க‌ளையும் ச‌மாளித்து ப‌ய‌ணப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் க‌ருணாக‌ர‌னுக்கு ந‌ம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

************************************************

புத்தக விபரம் :

காகிதப் படகில் சாகசப் பயணம்

பெ.கருணாகரன்

குன்றம் பதிப்பகம்

விலை : ரூ 150.

Wednesday, October 16, 2013

இருமண்வெட்டிகள்...




திரு ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளுக்கு, வ‌ண‌க்க‌ம். தங்களுடைய பதிவு ஒன்றில் மண்வெட்டியை பற்றி எழுதியிருந்தீர்கள். நெடுநாட்களாய் என் மனதில் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தாங்கள் மண்வெட்டியை அவதானித்து எழுதியிருப்பதால் தங்களிடம் கேட்கத்தோன்றியது. விடை கிடைத்தால் மகிழ்ச்சி. “இல்லை என்ற பதில்” கிடைத்தாலும் மகிழ்ச்சியே… ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தற்போதைய தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்) வயல்வெளிகள் மற்றும் கட்டுமானம் செய்யும் இடங்களில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியை தாங்கள் கண்டிருக்கக்கூடும். சோழமண்டலத்தின் மருமகனானதால் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மண்வெட்டியின் கைப்பிடி சற்றே நீளமாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி சற்றே அதிகமாகவும் இருக்கும். ஆனால் மற்றப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியின் கைப்பிடி நீளம் குறைவாகவும், இலைக்கும் கைப்பிடிக்கும் உள்ள இடைவெளி குறைவாகவும், மிகவும் குனிந்து பயன்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளதே, இதற்க்கு ஏதாவது தனித்துவ காரணங்கள் உண்டா? ஆம் எனில், தெரிவிக்க இயலுமா?


ந‌ட்புட‌ன்,
யோகேஸ்வ‌ர‌ன்
வழிப்போக்கன் – யோகேஷ்
http://vazhippokkann.blogspot.in/


அன்புள்ள யோகேஸ்வரன்

ஆம், அந்த வேறுபாட்டைத்தான் நான் பதிவுசெய்திருந்தேன் தஞ்சையிலும் நாகர்கோயிலிலும் உள்ள மண்வெட்டி ஒரேபோலத்தான் இருக்கும். கோயில்பட்டி சிவகாசி மண்வெட்டிதான் அலகுக்கும் பிடிக்குமான இடைவெளி குறைந்து குனிந்து வேலைசெய்வதுமாதிரி இருக்கும் தஞ்சைக்கும் நாகர்கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை இங்கே மண் களியாக இருக்கும் என்பதுதான். நெல்விவசாயம் அதிகம். களிமண்ணை நின்றபடி வெட்டி நெம்பி புரட்டவேண்டும். அதற்காகத்தான் இந்த மண்வெட்டி கோயில்பட்டி கரிசல் பகுதிகளில் மண் குமுகுமுவென்றுதான் இருக்கும். மிளகாய் போன்ற புஞ்சை பயிர்களே அதிகம். மண்ணில் களையைச் செதுக்கிப்போடத்தான் அதிகமும் மண்வெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். வாய்க்காலில் நீர் அடைக்கவும். அதற்கு அந்த மண்வெட்டி வசதியானதாக இருக்கலாம்.

ஜெ


{{
மண்வெட்டி பற்றிய நமது சந்தேகமும் அதற்கு திரு.ஜெயமோகன் அவர்கள் அவருடைய தளத்தில் அளித்த பதிலும்.

http://www.jeyamohan.in/?p=40339

}}

Thursday, September 12, 2013

'வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை...


படிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.


ப‌டித்து முடிக்காம‌ல் வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளை முடித்த‌ பிற‌கே புது புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ விர‌த‌த்தை சற்றே த‌ள‌ர்த்த‌ வைத்த‌து மோக‌ன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்க‌வ‌ரி சென்று மோக‌னையும் சுரேகாவையும் பையில் அடைத்த‌பிற‌கும் ம‌ன‌சு அலைபாய‌,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க‌.நா.சுவும்,வ‌ண்ண‌நில‌வ‌னும் இட‌ம் பிடித்துக்கொண்டார்கள்.

வீடு திரும்பியதும் கையில் எடுத்தது "வீடு திரும்பலின்" வெற்றிக்கோடு புத்த‌க‌த்தை. அதைப்ப‌ற்றி கொஞ்ச‌ம்....

புத்தக விபரம் :

வெற்றிக்கோடு
'வீடு திரும்பல்' மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.

 
85 ப‌க்க‌ங்க‌ள் (முன்னுரை ம‌ற்றும் முடிவுரை த‌விர்த்து). 19 க‌ட்டுரைக‌ள். ச‌ட்டென்று ஆர‌ம்பித்து ச‌டுதியில் முடியும் எழுத்து ந‌டை.

"உன‌க்கு புத்திம‌தி சொல்லுற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ அப்பாட‌க்கர் இல்லை, என‌க்கு ந‌ட‌ந்த‌தை,நான் பின்ப‌ற்றுவ‌தை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்ட‌மிருந்தா ப‌டி, இல்லாட்டி போயி புள்ள‌குட்டிக‌ள‌ ப‌டிக்க‌ வை" என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோக‌னின் மைண்ட் வாய்ஸ் : நாங்க‌ள்ளாம் எவ்வ‌ள‌வு பாத்திருக்கோம்!!!!!!!)

பெரும்பாலான க‌ட்டுரைகள் ந‌ம்முடைய‌ வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்க‌ட்டிக்கொண்டு ப‌ட‌ம்பிடித்தது போல‌ இய‌ல்பாய்...

வெள்ளிக்கிழ‌மை போட்டுக்கிற‌ ச‌ட்டையை ( வியாழ‌க்கிமை மழை வ‌ந்துட்டா என்ன‌ ப‌ண்ணுற‌து??) புத‌ன்கிழ‌மையே சுவைச்சி ரெடி ப‌ண்ணி வைக்கிற‌ முன் ஜாக்கிற‌தை முத்த‌ண்ணா பார்ட்டி நான், சில‌ கட்டுரைகளை படிக்கையில் சிரிப்ப‌தை த‌விர்க்க‌ முடிவ‌தில்லை.

 புத்த‌க‌த்தில் பிடித்த‌ சில‌ ப‌குதிக‌ள் :

 "உங்க‌ள் வாழ்க்கையின் சில‌ ப‌குதிக‌ளை நீங்க‌ள் திரும்பி பார்க்க‌வும், உங்க‌ள் வாழ்க்கைக்கு தேவையான‌ ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் க‌ற்றுத்த‌ர‌வும் செய்யுமானால் இந்த‌ புத்த‌க‌ம் த‌ன் க‌ட‌மையை செய்துவிட்ட‌து என்று அர்த்த‌ம்".

"முத‌லில் ஒருவர் செய்த‌ க‌ண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றிய‌வர் முத‌லாம் நப‌ரைவிட‌ அதிக‌ பிர‌ப‌ல‌ம் ஆன‌து ந‌ட‌ந்துதான் உள்ள‌து".

படிக்கையில் ச‌த்துண‌வு திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திய‌ காம‌ராஜ‌ரும், அத‌னை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்திய‌ எம்.ஜி.யாரும் நினைவுக்கு வ‌ருகிறார்க‌ள்.

"முக்கிய‌ பொருள்க‌ளை எப்போதும் குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைப்ப‌தும் அங்கிருந்து தேவையான‌ போது உட‌னே எடுப்ப‌தும் மிக‌ச்சிறிய‌, ஆனால் ந‌ம் நேர‌த்தை நிறைய‌ சேமிக்கிற‌ விஷ‌ய‌ம்".

நான் சிர‌த்தையுட‌ன் க‌டைபிடிக்கும் விஷ‌ய‌ம் இது. 'பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்'  அலுவ‌க‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌,வீட்டுக்கும் சேர்த்துதான்.

நிறைமாத கர்ப்பிணி‍‍‍‍‍‍‍‍‍‍ போல‌ எப்போதும் காட்சிய‌ளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்த‌து எப்போது???

"மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)" "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?

"வெற்றி பெற‌,முன்னேற‌,ம‌கிழ்ச்சி கொள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் உரிமை உண்டு.அது ந‌ம‌க்கு ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து மூட‌த்த‌ன‌ம்.வாழ்க்கையும், வாய்ப்புக‌ளும் அனைவ‌ருக்கும் போது."

"உங்க‌ள் குடும்ப‌த்தார் வ‌லி,க‌ண்ணீர் உண‌ராது நீங்க‌ள் இம‌ய‌மே தொட்டாலும் அதில் எந்த‌ ப‌ய‌னுமில்லை."

"க‌ட‌வுளாலும் முடியாத‌ விஷ‌ய‌ம் ஒன்று உண்டு. ந‌டந்ததை மாற்ற அவராலும் முடியாது! "

சில சிறு குறைகள் :

செல்ல‌ அம்மாவிற்க்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

"பதிவு" என்ற வார்த்தையை "கட்டுரை" என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.

ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.

*************************************************************
 நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.

சக பதிவராக‌, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது...

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே....

*************************************************************

"வெற்றிக்கோடு" - செட்டியார்கடை  தேன்மிட்டாய்.

*************************************************************


Friday, March 8, 2013

ஒரு புளியமரத்தின் கதை.


ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்...


ஒரு புளிய‌ம‌ர‌த்தை க‌தைக்க‌ருவின் நாய‌க‌மாக‌ ( அஃறிணை???) கொண்டு இப்ப‌டி ஒரு ப‌டைப்பை உருவாக்க‌ முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் ச‌ந்தேக‌ம் என்னுள்ளும் வ‌ந்த‌தில் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஏதுமில்லைதான்.



க‌தையின் ஆர‌ம்ம‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌னிப்ப‌ட‌ல‌மாய் ம‌ன‌தில் உருவ‌க‌ம் பெற்ற‌ புளிய‌ம‌ர‌ம்(வேப்ப‌ம‌ர‌ம்?), கொப்ளான் வெட்ட‌ முய‌ற்சிக்கையில், தாமோத‌ர ஆசானுடன் நானும் மனதினூடே போராடுகையில் கொஞ்சமாய் பதிய ஆரம்பித்து, தேர்தல் நேரங்களில் எப்போது முடுவுகட்டுவார்களோ என்ற பதபதைப்புடன் வாசிப்பை தொடர்ந்து, தாய்தடியில் கூலி ஐய்யப்பனால் விஷம் வைக்கப்படும்போது தொண்டை எச்சில் காய்ந்து போகிறது.


எல்லாம் முடிந்து மரம் பட்டுப்போய் நிற்கையில்,மரத்தை உருவகப்படுத்த மனமின்றி புத்தகத்திற்க்கு சற்று ஓய்வு கொடுக்க எண்ணி மூடி வைக்கையில் கண்ணில் பட்டது புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பட்டுபோன மரத்தின் படம் ( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்).




பழக்கப்பட்டிறாத பல வார்த்தைகளை சுகாவின் வேணுவனம் மற்றும் தாயார் சன்னதியில் பரிச்சயப்படுத்திக்கொண்டது சௌகரியமாகவே இருந்தது.


சக்கரம் என்ற வார்த்தைக்கான சரியான அளவுகோலை புத்தகத்தின் கடைசி பக்கத்தில் தெரிந்துகொள்கையில் சற்றே சந்தோசம்.


புரியாத வார்த்தைகள் வந்து விழுகையில் அர்த்தம் தெரியவில்லையே என்ற கவலையைவிட, இவ்வளவு வட்டார வழக்கு சொற்கள் வழக்கொழிந்து போய்விட்ட கவலையே மேலோங்கியது.



"கிண்ட‌ல் செய்வ‌து" என்ற‌ ப‌த‌ம் என‌க்கு தெரிந்து ச‌மீக‌மாக‌ வ‌ழக்க‌ழிந்து வ‌ரும் சொற்க‌ளில் ஒன்று. சென்னை ப‌குதிக‌ளில் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுக்கொண்டிடுந்த‌ "க‌லாய்ப்ப‌து" என்ற‌ வார்த்தை த‌ற்போது எல்லா ப‌குதிக‌ளிளும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

சுந்த‌ர‌ ராம‌சாமியின் முத‌ல் ப‌திப்பு(1966) முன்னுரையில் சொல்லியிருக்கும், கூலி ஐய்யப்பனின் உறவாக கொண்டு செல்லப்படவேண்டிய பொரிகடலைக்காரியின் (கதா)பாத்திரத்தை கதையின் போக்கில் இடையிடையே நானே பொருத்திப்பார்த்ததுண்டு.


ஊருக்கு செல்கையில் அருகருகே நின்றுகொண்டு கிளைகளால் இழைந்து கொண்டிருக்கும் கொல்லைப்புற புளியமரத்தையும், வேப்பமரத்தையும்(எங்கள் வீட்டு சாமி மரம்) ஆசையாய் தடவிப்பார்க்க வேண்டும்.

ஒரு சந்தேகம் : சு.நா. தனது ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புளியமரம் தனது ஊரில் இருந்த ஒரு வேப்பமரம் என்று தெரிவிக்கிறார். அப்புறம் ஏன் கதையில் வேப்பமரம்ன்னு எழுதாமல் புளியம‌ரம்ன்னு எழுதியிருக்கிறார்???  இதுவும் ஒரு வழக்கு சொல்லா இருக்குமோ? இல்லாட்டிஏதாவது வேண்டுதலா இருக்குமோ?????

******************************************

த‌லைப்பு : ஒரு புளியமரத்தின் கதை.

நூல் ஆசிரியர்: திரு.சுந்தரராமசாமி.

பதிப்பகம் : காலச்சுவடு.

விலை : 175

IBSN # : 978-81-90080-10-1

******************************************

Friday, December 21, 2012

21-12-2012 : "பிரபஞ்ச அஸ்தமனம்".

முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கையில் மணி 5.40. வேகவேகமாக வந்து டிவியை ஆன் செய்து, ரிமோட்டை தட்டுகையில் ஒரு வித பயம் கலந்த படபடப்பு....

0,1,2,3...... 99               98,97,96....... 3,2,1,0. ம்... ஒன்னுலியும் ஒன்னும் காணோம்.... டிவியை மியூட்டில் போட்டுவிட்டு வ‌ந்து ப‌டுத்துவிட்டேன்...


இப்ப‌திவை எழுதும் நேர‌ம் இர‌வு 7.47. வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற‌க்கூடிய‌ எந்த‌வித‌ நிகழ்வும் இன்றைய‌ மீதி பொழுதினில் ந‌ட‌ந்துவிட‌க்கூடிய‌ சாத்திய‌க்கூறுக‌ள் மிக‌ மிக‌ குறைவே...

21-DEC-2012. பிர‌பஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது..... கடைசி பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதோ கொள்ளைபுறமாக வேகமெடுத்து வந்துகொண்டிருக்கும் சூறைக்காற்....... என்று நிறைவுசெய்யமுடியாத பதிவை  எழுத முடியாத‌ சோகத்தோடு இந்த பதிவு நிறைவுசெய்யப்படுகிறது...


***************************************************

‎21-DEC-2012 : ANOTHER DAY ANOTHER DOLLAR???

21-DEC-2012 : மற்றுமொரு (அ)சாதாரண நாள்???

***************************************************

Tuesday, December 18, 2012

கவுஜ‌...


முத்தமிட முயற்ச்சிக்கும் செடிகளுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை இடையிலிருக்கும் சுவற்றின் வரலாறு...