Saturday, October 30, 2010
சார் போஸ்ட்.............
Saturday, September 4, 2010
நீச்சல்குளமும் ரெட்டைவால் குருவியும்.
இந்த வாரம் லாங்க் வீக்எண்ட் (Sep 6th Labor day) என்பதால் எங்கு செல்லலாம் என கடந்த மூணு வாரமாக திட்டம் போட்டு ஏற்கனவே போய் வந்த இடம், போகாத இடம், மீண்டும் போகத்தோன்றும் இடம், விமானத்தில் போக வேண்டிய இடம், காரில் போக வேண்டிய இடம் என்று அலசி ஆராய்ந்து கடைசியில் இந்த தடவை எங்கேயும் போகாமல் வீட்டில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று முடிவு பண்ணியாச்சி...
வெள்ளி இரவு நடுநிசி கடந்தும் தூங்காமல் பொட்டித்தட்டிக்கொண்டுருந்துவிட்டு அப்புறம் SAW படத்தின்
PART-V ம் PART-VI ம் பார்த்து முடித்து தூங்க செல்கயில் மணி காலை 5.30.
மதியம் 3 மணி சுமாருக்கு துகிலெழுந்து, மோட்டு வலையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கயில், குளத்துப்பக்கம் போலாமே என்ற யோசனை வர, சரி போயி ரொம்ப நாளாச்சேன்னு அபார்ட்மெண்ட்டின் தரைதளத்தில் இருக்கும் குளத்துக்கு கிளம்பினேன்.
எங்க அபார்ட்மெண்ட் குளத்துல குளிக்கறத்துக்கு கொஞ்சம் கெடுபிடி இருக்கும். அங்க உள்ள போர்டுல எழுதிபோட்டுருக்குற வரைமுறை படித்தான் நடந்துக்கணும்... சாரி.... குளிக்கணும்.
குளத்துல இறங்குறத்துக்கு முன்னாடி life guard ஒருத்தர் நம்மகிட்ட "நீச்சல் தெரியுமா?", "இதுக்கு முன்னாடி குளிச்சிருக்கியா"(பாத்ரூமுல இல்ல குளத்துல...)? அப்படீன்னு குறுக்கு விசாரணையெல்லாம் பண்ணிட்டு "OK, you can get into the pool now" அப்படீன்னு சொல்லிட்டு கைல ஒரு பட்டய கட்டிவிடுவார்.
நான் போனப்ப எப்போதும் இருக்குற life guard இல்ல, அவருக்கு பதிலா புதுசா ஒரு பொண்ணு ஒக்காந்துருந்துச்சி... என்ன பாத்து என்ன நினச்சிதுன்னு தெரியல, எதுவும் கேக்காமலே "Sir, you can get in" அப்படீன்னு சொல்லிட்டு கைல இருந்த ஐபோன நோண்ட ஆரம்பிச்சிடுச்சி...
எங்க வீட்டு குளத்துல( அட நாம இருக்குற வீட்ட நம்ம வீடுன்னு சொல்லுறது இல்லியா? அப்ப நம்ம வீட்டுல இருக்குற குளத்தை நம்ம வீட்டு குளம்னு சொல்லலாம்ல...) குளிக்க வந்தவங்க உடனே குளத்துல எறங்க மாட்டாங்க.... குளக்கரை ஓரமா மெதுவா ரெண்டு மூணு ரவுண்டு சுத்தி வருவாங்க. அப்புறமா குளத்த சுத்தி போட்டுருக்குற கட்டில்ல குப்புற பத்து நிமிசம், மல்லாக்க பத்து நிமிசம் படுத்திருப்பாங்க.... அப்புறம் கொண்டு வந்திருக்கிற புத்தகத்த பத்து நிமிசம் படிப்பாங்க.... அப்புறம் i-pod ல பத்து நிமிசம் பாட்டு கேப்பாங்க.... அப்புறம் கூட வந்திருக்குற பாப்பா வாயில தேனு இருக்கானு வாயால ஆராய்ச்சி பண்ணுவாங்க..... அப்புறமா தண்ணியில குதிப்பாங்க..... இப்படியெல்லாம்
பண்ணினாதான் பிரபல பதிவராம்... அய்யோ. மறுபடியும் சாரி.... பிரபல நீச்சல்காரராம்.....
குளிக்க(?) சென்றபோது எடுத்த போட்டோ.
ம்ம்ம்... நமக்கு தேனு எடுக்கறத்துக்கு எல்லாம் ஏது கொடுப்பினை.... அப்புறம் நாம இருக்குற கலருக்கு சூரியன பாத்து மல்லாக்க படுத்தா என்ன ஆவறது.... அதனால ஒரு ஓரமா நிழல்ல கிடந்த கட்டில்ல போயி படுத்துக்கிட்டு கைல எடுத்துட்டு போயிருந்த நம்ம பழமைப்பேசி அண்ணனோட ஊர்பழமை புத்தகத்த எடுத்து ஏற்கனவே படிச்சி விட்ட இடத்துலெருந்து படிக்க ஆரம்பிச்சேன்.....
பத்து நிமிசம் கழிச்சி புத்தகத்த நெஞ்சில் மல்லாத்தி விட்டு i-pod ட எடுத்தேன்... ஓவ்வொரு பாட்டா scroll பண்ணும்போது கண்ணில் பட்டது அந்த பாட்டு. பாட்டை select செய்வதற்க்குள் மனசு குளத்த தாண்டி, வீட்டை தாண்டி, ஏர்போர்ட் போயி, பிளைட் புடுச்சி கண்டம் விட்டு கண்டம் தாண்டி மெட்ராஸ்ல எறங்கி பஸ் புடிச்சி எங்க ஊரு குளக்கரைக்கு சென்றுவிட்டது.....
சின்ன வயசுல ஒருநாள் ஊரு குளத்துல குதியாளம் போட்டுக்கொண்டுருக்கயில் காற்றுவாக்கில் காதருகில் வந்த பாட்டு. அப்போது இன்னார் இசையில் வந்த பாட்டுன்னோ, இன்னார் பாடிய பாட்டுன்னோ, இந்த படத்தில் வந்த பாட்டுன்னோ தெரியாது. மொத தடவயா கேக்கும்போது என்னையுமறியாமல் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தெரிஞ்சிது....
இன்னக்கி கேக்கும்போதும் என்னால் அந்த சிலிர்ப்பை உணரமுடிந்தது....
அமெரிக்க நீச்சல்குளத்தில் இருந்து எங்கள் ஊர் தாமரைகுளத்திற்க்கு சடுதியில் என்னை அழைச்சிட்டு போன இந்த பாட்டை நீங்களும் கேட்டுபாருங்களேன் (ஏற்கனவே கேட்டுருந்தாலும்.)
டிஸ்கி : கண்ணை மூடி இந்த பாட்டயே திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருந்ததுனால நேரம் போனதே தெரியல.... படுத்திருந்த கட்டில் திடீர்ன்ணு ஆட, கண்ண தொறந்து பாத்தா life guard பெண், "Sorry Sir, the pool time is closed, you gotta leave the pool in five minutes.. " ன்னு சொல்லிட்டு போச்சு.
ம்ம்ம்... குளிக்க வந்ததுக்கு இதவாச்சும் செஞ்சிட்டு போவோம்னுட்டு ரெண்டு காலையும் தண்ணியில நனைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்....
Friday, September 3, 2010
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா திருமண வீடியோ
*********************************************************************************
பதிவில் indianiteracts வலைத்தல முகவரியில் உள்ள வீடியோவிற்க்கு பதிலாக indiaglitz வலைத்தல முகவரியில் உள்ள வீடீயோ இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************
ஆறு நிமிடம் இருபத்தி ஆறு வினாடிகள் உள்ள வீடியோ தொகுப்பு.மிக தெளிவாகவும்
திருமண விழாவின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
மராத்திய பாரம்பரிய தலப்பாகையுடன் ரஜினி.வீடியோ முழுவதும் சிந்தனைவயப்பட்டவராகவே இருக்கிறார்.நீங்களே பாருங்களேன்.
நன்றி : indiaglitz வலைத்தளம்,பதிவர் சித்ரா.
டிஸ்கி : நீங்க ஓட்டு போட்டா மத்தவங்களும் இந்த வீடியோவ பாப்பாங்க....
Monday, August 23, 2010
இதுக்கு என்ன பேர் வைக்கலாம்?
"சொல்லு குமரா, ஏதோ பேசணும்ன்னு சொன்னியே", கண்ணாடியை பனியனின் உள்பக்கத்தில் துடைத்தவாரே மகனை ஏறிட்டவரின் எதிரில் வந்தமர்ந்தான் குமரன்.
"அப்பா, நா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..... " பேசிக்கொண்டு இருந்த குமரனை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார் வேதாசலம்.
படபடவென சொல்லி முடித்து, வேதாசலத்தின் முகபாவத்தை படிக்க முயற்சி செய்துகொண்டிருந்த குமரனுக்கு அப்பாவின் அந்த கேள்வி சற்றே சந்தோசத்தை கொடுத்தது. இதழோரம் வரவைத்துக்கொண்ட புன்னகையிணூடே "நீங்க, கண்டிப்பா கேப்பீங்கன்ணு தெரியும்பா, அவளும் நம்ம ஜாதிதான்............".
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஹலோ, எங்க கிளம்பிட்டீங்க, கத இன்னும் முடியல...... கொஞ்சம் கீழே படிங்க....
"குமரா, இந்த கல்யாணம் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாயிடும். அவளை மறக்குற வழிய பாரு........... " முடிவாய் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் வேதாசலத்தை பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் குமரன்.
Wednesday, August 18, 2010
வருத்தப்படாத வாலிபால் சங்கம்(ஸ்தாபிதம்:மார்ச்-2008)

2008 ல் ஆரம்பித்த ஒரு விசயம் நேற்று வரை தொடர்கிறது.....
என்னதான் நடந்துச்சின்னு நீங்களே படிங்களேன்....
2008 மார்ச் மாசத்துல ஒருநாள் ஆஃபீஸ்ல வாலி பால் லீக் மாட்ச் நடக்கப்போவுதுன்னு மெயில் அனுப்புனாங்க. ஊருல ஸ்கூல் / காலேஜ் டைமுல விளையாடி இருக்கறததுனால நானும் ஒரு டீம் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன். டீம் பேரு v.v.s ( "வருத்தப்படாத வாலிபால் சங்கம்")
டீம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சி, இப்ப டீமுக்கு ஆளு சேக்கணுமே... ஒரு வழியா ஆஃபீஸ்ல ஒரு மூணு பசங்கள தேத்தித்டேன்.(கோவை ப்ரதர்ஸ் படத்துல சத்தியராஜூம் வடிவேலும் கிரிக்கெட் விளயாட ஆள் புடிப்பாங்களே, அந்த மாதிரி....)
அடுத்ததா ஒரு பிரச்சினை, மேட்ச் ரூல்படி ஆறு பேருல ரெண்டு லேடீஸ் பிளேயர் கண்டிப்பா இருக்கணும். ஒரு வழியா இன்னொரு டீம்ல உள்ள ஒரு வெள்ளக்கார புள்ளைய கரெக்ட் பண்ணி, அந்த புள்ள வழியா அதோட கேர்ல் ஃபிரண்ட கரெக்ட் பண்ணி ( என்னமோ அவனோட கேர்ல் ஃபிரண்ட் மாதிரி சொல்லுரானேன்னு நீங்க நினைப்பீங்க,சும்மா எழுதும்போதாவது இப்படி எழுதி மனசதேத்திக்கலாம்ணுதான்) ஆறு பேர் ரெடீ பண்ணிட்டேன்.
அப்பாடா.... ஒரு வழியா எல்லாம் முடிஞ்சிது, களத்துல எறங்க வேண்டியதுதான் பாக்கின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது டீம் என்ரோல்மென்ட் பீஸ் 400$ கட்ட சொல்லி மெயில். ( 400$ பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த ஏரியா பக்கமே எட்டி பாத்துருக்க மாட்டேன்....) . அந்த ரெண்டு வெள்ளக்கார புள்ளங்க கிட்ட பங்கு கேட்டா "உங்க கூட விளயாடுரதே அதிகம்.. இதுல பங்கு காசு வேற கொடுக்கன்னுமான்னு கோச்சிகிட்டு கா விட்டுருவாங்கலோண்ணு பயம். ஒருவழியா 400$ல பசங்க நாலு பேரு மட்டும் பங்கு போட்டு கட்டுனோம். பணத்த கட்டிட்டு நாங்க நாலு பேரும் ஆளு வச்சி அழுது தீர்த்ததுதனிகதை.
ஒரு நல்ல நாளா பாத்து (நம்ம ஊருன்னா பஞ்சாங்கம் பாக்கலாம், இது அமெரிக்கா இல்ல அதனால வெதர் ரிபோர்ட்.) மாட்ச் ஆரம்பிச்சாங்க. அப்படி இப்படி ன்னு விளையாடி 24 லீக் கேம்ல 19 கேம் . பண்ணி Rank-1 வந்துட்டோம் .
லீக் மாட்சில win பண்ணி அடுத்த லெவெல்க்கு போனா பாடிகாட் முனீஸ்வரருக்கு பதினொரு தேங்கா உடைக்கறதா வேண்டி இருந்தேன். லீவுக்கு இந்தியா வரும்போது முதல் வேலையா அத நிறைவேத்தனும்.
ஒரு வழியா Semi-finals ம் Win பண்ணி Final மாட்ச்க்கு ஸெலெக்ட் ஆகிட்டோம். நிறைஞ்ச அமாவாசை அன்னைக்கி Final மாட்ச் நடந்துச்சு. அமெரிக்கால இருக்குறவனுக்கு அமாவாசைய பத்தி எப்படி தெரியும்னு நினைக்காதீங்க. வீட்டுல தமிழ் மாச காலண்டர் வச்சிருக்கோமுல்ல.
Final மாட்ச்ல நமக்கு கிரகம் சரியில்ல, அதனால “Runner-Up.” தான் கிடைச்சிது. “Runner-Up”னா சும்மாவா, வெற்றி கனியை தொட்டு பாத்துட்டு வந்துருக்கொமிலான்னு சவுண்ட குடுத்துக்கிட்டு திரிஞ்சோம். அப்படியே 2009 மேட்ச்ம் நடந்தது, அதுலயும் "Runner-Up".
2010க்கான league மாட்ச் ஏப்ரல்ல ஆரம்பிச்சி நேத்து முடிஞ்சிது, வழக்கம்போல final மாட்சில "Runner-Up".
ம்ம்ம்….. மூணு வருசமா “Runner-Up” டைடீல் வாங்கினததுனால இந்த உலகம் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு………..
இன்னும் எத்தனை நாளைக்குதான் விளையாட தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது……..
Thursday, July 29, 2010
ஓ-ஞாநி:பத்திரிக்கை சுதந்திரம்-பறிக்கப்படும் தந்திரம்
அன்றிரவு கார் பயணத்தில் குமுதம்- ஓ பக்கங்கள் சம்பந்தமான பேச்சே அதிகம் பயணித்தது. வார்த்தை முடிவுகள் கடிதமாய் மாறியுள்ளது இப்போது......
சமீப காலமாய் ஞாநியின் கட்டுரைகளின் சில சாராம்சங்கள் குறிப்பாக அரசுக்கு, ஆளும் கட்சிக்கு எதிரான விசயங்கள் குமுதம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ வெளிவந்தன. மேல்மட்ட நிர்வாகத்தில் வந்துள்ள பிரிவினை இதற்கான அடித்தளம் என்று தெரிகிறது...
"எழுத்தில் சமரசம் என்பது எனக்கு ஒத்துவராத விசயம், இந்தியா திரும்பியவுடன் என்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்பதே அவருடைய இறுதி முடிவாய் இருந்தது. அந்த முடிவு மின்னஞ்சல் வாயிலாக குமுதத்தை சென்றடைந்திருக்கிறது.
குமுதம் வார இதழில் தன்னால் ஓ பக்கங்கள் கட்டுரையை தொடர்ந்து எழுத முடியாததற்கான காரணங்களை தெரியப்படுத்தி அதனை தனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
ஞாநி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதங்கள்
(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )
Wednesday, July 28, 2010
காற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்
"வரும்படிக்கு வழி செய்யும் வார்த்தை விந்தைகளை வாரஇதழ்கள் வழக்கமாக (அட.... நமக்கு கூட வருது...) பயன்படுத்துவார்கள். சாதாரண விசயத்தை தலைப்பில் பூதாகரமாக்கி உள்ளே படிக்கையில் புஸ்ஸ்......... என்று போக வைக்கும் பல விசயங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் இந்த புதனன்று ஜூனியர் விகடனில் வந்துள்ள "கடற்கரையில் காத்து வாங்க போன கலைஞரின்" கவர் ஸ்டோரி.


அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு அசைவிற்க்கும் அர்த்தம் கற்ப்பித்து இவர்கள் போடும் கவர் ஸ்டோரி பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும்.
"ஆளுங்கட்சிக்கு ஆப்பு... அம்மாவின் அதிரடி" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி போடுவார்கள். உள்ளே படித்தால் "ஜெயலலிதா புதிதாக வாங்கியுள்ள வெளிநாட்டு டீவியில் கலைஞர் டீவி அல்லது சன் டீவியை செலக்ட் செய்தால் டீவி தானாகவே ஆஃப் ஆகிவிடுமாம்...." என்ற ரேஞ்சிக்கு மேட்டர் இருக்கும்...
ரஜினியின் புதுபட ரிலீசின்போது வாரஇதழ்களில் "அரிதாரத்துக்கு சலோ ... ஆன்மீகத்துக்கு ஹலோ", "சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்" என்ற மாதிரியான தலைப்பில் "ரஜினி இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு" என்று ஒரு கவர் ஸ்டோரி கட்டாயம் வெளிவரும்.
சிவாஜி படம் படபிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், "சிவாஜி படத்தின் கதை", "தமிழ் இதழ்களில் முதல்முறையாக" என்று பில்டப் கொடுத்து ஒரு கதையை போட்டு இருந்தார்கள்
( குமுதமா இல்ல ஆ. விகடனான்னு சரியா ஞாபகம் இல்லை...) படம் வந்த பிறகு படத்தின் கதைக்கும் அவங்க போட்டுருந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் பண்ணும் அளப்பரை.... ஸ்ஸ்........... யெப்பா.. தாங்க முடியலை.போகிற போக்கை பார்த்தால் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலை மைய்யப்படுத்தி "கலைஞரின் கடைசி தேர்தலாய் மாறப்போகும் கண்ணம்மா பேட்டை கவுன்சிலர் தேர்தல்" அப்படீன்னு கவர் ஸ்டோரி போட்டாலும் போடுவார்கள்.
(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )